வியாழன், 22 அக்டோபர், 2009

அதி காலை
மெல்லத் தழுவும் சூரியன்
இலைகளின்
அசைவில் தெரியும் ஒளி
தெரியாத காற்று
விழிப்பின் முதல் உராய்வில்
கண்கள் திறக்கக்
கரைந்தன பறவைகள்
ஓ,
அதி காலை oliyum
indhap
paravaigalukku
கொஞ்சம்
athiyo?

சனி, 10 அக்டோபர், 2009

விடுமுறை

உன் பாதச் சுவடுகளைப்
பார்த்ததும் பூரித்தேன்

எனக்கு ஆச்சர்யம் வர வேண்டும் என்று
சொல்லாமல் என்னைத் தேடி
வந்து போய் இருப்பாய் என்றும் யூகித்தேன்

உன் பாதச் சுவடுகளைத்
தொடர்ந்து உனக்கு
அதே ஆச்சர்யம் தர முடியும்
என்று யோசித்தேன்

கடற்கரை வரை வந்து சேர்ந்தேன்
ஓ, மழை கடலில், கரையில்
என் மேனி முழுதும்

நம் இருவரையும்
தொடர்ந்து வந்த இயற்கையை
எண்ணி மாய்ந்து போனேன்

உன் பாதச் சுவடுகள்
கலைந்ததில்
எனக்கு வீடு திரும்பத் தெரியவில்லை 

புதன், 7 அக்டோபர், 2009

இந்தக் கவிதைகள்

நான் இவற்றை
எழுதுவது துர்லபம்

நான் எண்ணங்களின்
மொழிபெயர்ப்புகளை
எழுத எத்தனிக்கும் முன்பு

இவை என்னை
எழுதி விடுகின்றன

என்னை இவை
எழுதுவது போல
அறிமுகப் படுத்துவது இல்லை
எந்த கவிஞனுக்கும்

என் வலைகளில்
என் மௌனங்களில்
என் நிழல்களில்
என் துணையாக
என்னை வரைந்தபடி
என்னை எழுதியபடி
என் கவிதைகள்

இவை என்னை
எழுதியதில்
ஒரு துளி கூட
நான் இவற்றை எழுத
முடிந்தது இல்லை

என் கவிதைகள்
நான் வளர்வதற்கு
முன்பு இருந்தே
உடன் இருந்து
என்னால் புரிந்து கொள்ள
இயலும் தருணம் வரை
எனக்குப் புலப்படாமல்
என் பார்வைக்கு என்றே
காத்திருக்கும் என் கவிதைகள்

நான் புரிந்து கொள்ளாமலேயே
என்னைச் சுற்றிலும்
சூழ்ந்த பசுமை போலும்
என் மீது விழாமலே
நான் காண வீழ்ந்த மழை போலும்

நான் புரிந்து கொள்ளாமலேயே
எனக்கு கருணை புரிந்து
என்னைக் காத்த என் கடவுள் போலும்

நான் புரிந்து கொள்ளாமலேயே
என்னை வளர்த்த
எனக்கு வழி காட்டிய என் அன்னை போலும்

நான் புரிந்து கொள்ளாமலேயே
என்னை எனக்குக் காட்டி
என் உலகமாக உருக்கொண்டு விட்ட
என் கவிதைகள்

என் வாழ்க்கையின்
பிரவாகத்தில்
என்னைத் தேக்கிக் கொண்டு
கரையோரம் நதியின்
புது வெள்ளம்
ஓயட்டும் என்றே
காத்திருக்கும் என் கவிதைகள்

என் மரணத்தின் போது
என் உடைமைகள் என்று
ஒரு சில என் வீட்டில் தங்கலாம்
என்னை இழந்தவர்கள்
எனக்காக அழலாம்
ஊரும் உறவும் அடங்கிய பின்
உற்றுப் பாருங்களேன்

நான் எழுதிய
உங்களிடம் 
வந்து சேராத
சில காகிதங்களில்
கிடைக்கும் கவிதைகள் இருக்கும்

மேலும் என்னை எழுதி
இன்னமும் எழுதும்
ஈரத்துடனும்
தகுந்த நேரத்துடனும்
மரணம் அடையாத
கவிதைகள்
உங்கள் உணர்வுகளின்
சந்திப்புக்காக
உறங்காமல் மௌனம் காத்தபடி
ஓயட்டும் ஒப்பாரிகள் என்றபடி
காத்திருக்கும்

இவை எழுதி
நான் காண
வாழாமல்
நீங்கள் பார்க்கின்ற
'நான்' உடன்

வெள்ளி, 2 அக்டோபர், 2009

உலக முதியோர் தினம்

உலக முதியோர் தினம்

காலம்  எனும் வானவில்
நிலம் விழும் காலம்
உயிர் சாயும் காலம்

பயணம் ஒன்று
கடமையாகத் தொடரும்

ஏறும் பொழுது கொண்டு
வந்த சுமைகள் என்னவோ
இறங்கும் பொழுது
ஒன்றும் இல்லை

ஓடி ஓடி
நடந்து கூட்டிச் சென்ற
குழந்தைகள் வளர்ந்து
புலம் பெயர்ந்து

mudhiyavargalukkum
munbaagave
pugaippadangalaaga
surunginar

வியாழன், 1 அக்டோபர், 2009

கரை ஆன நதி

தாகத்தில் நதியின்
நா வரண்டது
நதியின் மரணம்
எப்பொழுது வேண்டுமானாலும்
நிகழலாம்
புதைப்பது கடினம்
மணல் படுகையில் இடம் என்று
ஒன்று இல்லை
சொல்லப் போனால்
மணல் கூட இல்லை

கடலில் வீழ்ந்து
காணாமல் போன
மழையை நதி பார்க்க வில்லை
அதனால்
அதன் ஆன்மா சாந்தி
அடைய வாய்ப்பு உண்டு
தகனக் கிரியைகள் எங்கே
நடக்கும்
எந்த நதியின் கரையில்?

நதி ஓய்ந்து போனது
கேள்விகள் ஓய வில்லை!

நதியில் விழுந்து
கடலில் சேர
வாய்ப்பு இல்லை என்று
உணர்ந்த மழை
ஒரு கேள்வியும் இன்றி
மீண்டும்
மீண்டும்
கடலில்
பெய்தது
வெற்றுக் காற்றுகளை
கரைக்கு அனுப்பிய படி

எந்தக் கரை?

கடலுக்குக் கிடைத்த கரை
கடலால் எப்பொழுது வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளப் படும்
நிலையிலும் கிடைத்த கடற் கரை போல்
ஒரு கரை
நதிக்குக் கிடைக்க வில்லை

நகரத்தின்
நரக பெருக்கத்தின்
நுகர்வுகளின்
புழுக்கங்களின்
பாதிப்புகளில்
சுரண்டல்களின்
இறுதிக் கட்டத்தில் 
நதியே கரை ஆனது

கால காலமாக
என், என் தந்தை, என் முன்னோர்கள்
வளர்ந்த பன்னூற்று ஆண்டுகளும் 
தன்னை
வழிபட்ட
சமூகங்களின்
எண்ணற்ற கடவுள்களும்
இடம் பெயர்ந்த 
கரைகளுக்கு இடையே
சுழன்று ஓடிய நதி

இன்று தானே
ஒரு கரையாகக்
கிடந்தது 

காலத்தின் மரண
வாக்கு மூலத்தை
மணலில் எழுதுவதற்காக
விரிக்கப் பட்ட
நீண்ட மடலே போலும்

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

yuga ratna: the symbol of emerging youth power

http://www.ndtv.com/news/blogs/climate_change/13-year-olds_message_at_the_un.php

யுக ரத்னா வருகின்ற இளைய சமுதாயத்தின் மிகப் பெரிய அலை
இந்த மகத்தான பெண்ணின் blog என் blog இல் இடம் பெறுவது
நான் செய்த புண்ணியத்தின் பலன் என்று தான் சொல்வேன்.

சனி, 5 செப்டம்பர், 2009

ஆசிரியர் தினம் - வாழ்த்துவேன் வணங்குவேன்

இன்று ஆசிரியர் தினம்
மன ஓட்டத்தில்
ஓர் ஆசிரியர் ஓர் ஆசிரியை
என்று தொடங்கி
வாழ்க்கையே ஒரு
மிகப் பெரிய பள்ளிக் கூடமாக
விரிகின்றது

என் ஒன்றாம் வகுப்பு
ஒழிசலில் கழிந்ததாலோ என்னவோ
ஆசிரியர் நினைவுக்கு வரவில்லை
இரண்டாம் வகுப்பு ஆசிரியர்
சுந்தரராமன் காதை மடித்து
சொன்னபடிக் கேட்க வைப்பார்

மூன்றாம் வகுப்பு
ஞானப்ரகாசம் அவர்கள்
கண்டிப்பானவர் அடித்தாரோ
ஞாபகம் இல்லை
ஆனால் அவரைப் பார்த்தவுடன்
அத்தனை சத்தமும் அடங்கி விடும்

நான்காம் வகுப்பு
ராமையா அவர்கள்
தன் உருண்ட தடியால்
மடித்து முன் வைக்கப்பட்ட
மணிக் கட்டைப்
பதம் பார்ப்பார்

ஐந்தாவது பின்
ஞானப்ரகாசம் அவர்கள் தான்
வந்ததாக ஞாபகம்
ஐந்தாம் வகுப்பில்
மனக்கணக்கு எனக்கு
ரொம்பவும் பிடித்திருந்தது
இன்றும் பல கணக்குகள்
எனக்கு மனத்தில் ஓடுவது
அதனால் தான்

ஆராவதில் ராதாகிருஷ்ணன் அவர்கள்
ஏழாவதில் லக்ஷ்மி பீம நரசிம்மன் அவர்கள்
எட்டாவதில் மகா லிங்கம் அவர்கள்
ஒவ்வொருவரும் என் கல்வியின்
அஸ்திவாரத்திற்கு வலு சேர்த்தவர்கள்

ஒன்பதாம் வகுப்பிலிருந்து பலப் பல
ஆசிரியர்களின் பாதிப்புகள்
என் எஸ் அவர்களைப் போல்
விஞ்ஞானம் தர யாராலும் முடியாது
கணிதத்திற்கு ரெங்கசாமி அவர்கள்
சிவாஜி கணேசன் போல ஒரு மிடுக்குடன் உலவுவார்
தலைமை ஆசிரியர் என்பதால் அது மிகவும் பொருத்தம்

ஆங்கிலத்திற்கு வீ ஜே ஏ சார்
ஆங்கிலத்திற்கு மட்டுமா
வாழ்க்கை முழுவதற்கும்
அப்படி ஒரு குரு வாய்க்குமோ

சரித்திரம் பூகோளம் இவையெல்லாம்
மாத்ருபூத நாடார் அவர்களின் நகைச்சுவையுடன்
வெளிப்படும் பொழுது
அந்த வகுப்புகளை நாடாத மாணவர்
யாரும் இல்லை
நகைச்சுவையின் உச்சம்
ஓவிய ஆசிரியர்
காலாண்டு பரீட்சைக்குப் பின்
விடுமுறை முடிந்து பள்ளிக்கு
நாங்கள் திரும்பிய உடன் முதல்
ஓவிய வகுப்பில் எங்களைப்
பார்த்து சொன்னது தான்

உங்களுக்கு ஓவியம் தான் வரலை
தமிழ் ஆவது வரும் என்று
நான் நம்பிக் கொண்டு இருந்தேண்டா
பார்த்தேன் உங்கள் விடைத்தாள்கள் எல்லாம்
கல் அண்டு, கல் ஆண்டு, கால் அண்டு
கேள்வித் தாளைப் பார்த்தாவது
காலாண்டு என்று எத்தனை பேரால்
எழுத முடிந்தது என்று.
உங்கள் தமிழை விட ஓவியமே
தேவலை போ!
கத்திரிக் காயின் முழு வடிவம்
பார்த்தால் ஓவிய வகுப்பு
ஞாபகம் வரும்!


பள்ளிக்குப் போகும் பொழுது
ஒரு புது உற்சாகம் எப்பொழுதும் உண்டு
ஆசிரியர்கள், காற்றோட்டம் நிறைந்த வகுப்புகள்
கிராமங்களில் இருந்து வரும் தோழர்களின்
உணவுகளின் ஒரு தனித்த வாசனை
பிரார்த்தனையில் தொடங்கி விளையாட்டில்
முடிகின்ற ஆரோக்யமான அந்த நாட்களின்
ஹீரோக்கள் எங்கள் ஆசிரியர்கள் தான்

ஆசிரியர்களைக் கண்டால்
நாங்கள் சைக்கிள்களில் இருந்து இறங்கி
வணக்கம் சொல்லி விட்டு
மீண்டும் பெடல்களில் ஏறுவோம்

நான் பிறந்து வளர்ந்த மண்ணின் மீது
கம்பீரமாக எழுந்து நிற்கும்
அந்த ஜமீன்தார் உயர் நிலைப் பள்ளியின்
முன்
முழு நீளமும் வீழ்ந்து வணங்க
மனம் ஏங்குகிறது
என் வாழ்வை ஒவ்வொரு
கல்லும் சொல்லிக் கொடுத்து
கோட்டை போல் கட்டிய
அத்தனை ஆசிரியர்களின் பாதங்களையும்
வணங்கவும்
அந்த மகத்தான உள்ளங்களை
வாழ்த்தவும் தான்

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

அகம் அறி (அவனுக்கு அறிவுரை)

உன் அகம்
புது வரவால் புது உறவுகளால்
விரிந்ததில் பூரித்திருக்கும்

அதன் வரவேற்புகளில்
உன் மீது இருக்கும் உற்சாகம்
அவள் மீதும்
அதே போல இருக்க வேண்டும்
என்று நீ நினைத்தாலும்
ஆணாதிக்க சமூகத்தின்
ஆர்ப்பரிப்புகளில் அது சாத்தியம் இல்லை

அவள் மீது உற்சாகம் இருந்தாலும்
ஒரு சில பயங்கள்
ஒரு சில சந்தேகங்கள்
ஒரு சில எச்சரிக்கைகள்
இருபக்கமும் கலந்த உற்சாகமே அது

உன் அகம்
ஒரு மாறுதலை
எப்படி எடுத்துக் கொண்டு
செயல் படுகிறது என்பதில்
உனக்கு கவனம் தேவை

உன் வாழ்க்கை
இது வரை உன் அகத்தின்
உள்ளும் புறமும்
பற்பல சுதந்திரங்களுடன்
அமைந்திருந்திருக்கும்
அந்த அகம் இப்போது மாறும்

அகம் முழுக்கவும்
உன்னை விடவும்
உன் மீது உரிமைகளை
சரளமாக கொண்டாடக்கூடிய
ஒவ்வொருவரை விடவும்
மாறுதல்களின் மேலாண்மை
அவளிடம் அதிகம் கேட்கப்படும்
விளைவுகள் அவள் பெயரில்
எழுதப்படும்

எனவே அவள் உன்னிடம்
பகிர்ந்து கொள்ள வேண்டிய
மாறுதலின் இடையில் தேறுதல்
மாறுதலின் இடையிடையே சோருதல்
அனேகமாக இருக்கும்
உன் காதுகளை தயாராக
வைத்திருப்பது மிக அவசியம்

இது ஒன்றும் இனிய காதல் உரையாடல் அல்ல
பொறுமையுடன் அலசி ஆராய்ந்து
இருவரும் இரு பக்கங்களையும்
பார்க்க வேண்டிய பரிசோதனை சாலை

உன்னைப் போல்
நினைத்த பொழுது
சொல்ல வேண்டியதை சொல்வது
அவளால் இயலாதது
அவளால் இயலும் என்றால்
மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள
அதனால் உட்படவும்
உன்னாலும் புரிந்து கொள்ள முடியாதது

இது சொல்ல நிறைய யாரிடம்
உள்ளதோ அவரிடம்
சொல்ல தயக்கமும்
தடையும் மிகும் ஒரு காலம்
காலப் போக்கில் இது மாறும்
ஆனால் இந்த தடைகளை நீ
நீக்க மாட்டாய் எனில்
நீக்காத ஒரு பழி உன்னைப் பார்த்து
ஏதோ ஒரு வகையில் கணக்கு
தீர்க்க வந்த படி இருக்கும்!

பரிவுடன் கேட்கும் திறன்
முன் எப்பொழுதையும் விட உனக்கு
இப்போது தான் தேவை
நீ ஆண் - தேர்ந்தெடுப்பவன்
என்றொரு மாயை
திரை உன் கண்ணை மறைத்திருக்கும்
ஆண் மகனாக உன் தேர்ச்சிகள் இப்போது தான் ஆரம்பம்

உனக்கு முழுமையாக
தெரியாத உன் அகம்
உனக்கு மீண்டும் தெரியாமலே
மாறிக்கொண்டிருக்கும் உன் அகம்
உன்னை உனக்குக் காட்டும்
ஒரு புதிய கண்ணாடியுடன் உன் அகம்
உன் நேரம் உன் கவனம் உன் புரிதல்
இவற்றை முன் எப்பொழுதும் விட
இப்போது நாடும் உன் அகம்
நீ ஒரு புதியவனாக
அணுகி உணர வேண்டிய உன் அகம்
அறிவதன் சோதனைகள்
அத்தனையும் உன் மேஜை மீது
குவிக்கும் உன் அகம்
உன் அகம் மீண்டும் அறி

அவன் அப்படி
அவன் இப்படி
என்று உன்னைப் பற்றிய
சித்திரங்கள் வரையப்படும்
இவை உன்னைப் பற்றிய
கேலி சித்திரம் ஆகாது
உன்னைக் காத்துக்
கொள்வது நல்லது

இந்த புதிய அகத்தில் உனக்கு
பெரிய பொறுப்பு
உன் வளர்ச்சியின் கதை
உன் நன்றிக்கு உரியவர்கள்
உன்னிடம் உரிமை
எடுத்துக் கொள்ளும் பொழுது
உன்னை மகிழ்விப்பவர்கள்
இவை எல்லாம்
உன் புதியவளுக்கு
நீ சொல்லிட அவளின்
மாற்றத்தின் மீதுள்ள
மேலாண்மை இன்னும் சிறக்கும்

உன்னைப் பற்றிய அறிவு
உன் வேலையோ கல்வியோ
உன் சமூக அங்கீகாரமோ அல்ல
உன்னை பற்றிய அறிவு
உன் மதிப்பீடுகளைப் பற்றியது
அவை
யூகத்திற்கு உட்பட்டவையோ
வியூகத்திற்கு உட்பட்டவையோ அல்ல
முதலில்
நீ அறிவாயா உன் மதிப்பீடுகளை?

உன் பொறுப்புகள் பல மடங்கு விரிகின்றன
இது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணிதம் அல்ல
இரண்டு பரம்பரைகளின் சந்திப்பில் நிகழும்
மிகப் பெரிய ரசாயனம்

உன் சமூகம் திடீரென பல்கி
உன் அடையாளங்களை
கேட்கும் காலம் இது
நீ நினைத்திருந்தது போல
இதற்கு தயாராக இருந்திருக்க மாட்டாய்
அது மட்டும் நிச்சயம்

நீயே இதை உணர்வாய்
சம்பந்தம் பேசாத
சமூக விதிகள்
மதிப்பீடுகள்
உணர்ச்சி ஒப்பந்தங்கள்
அத்தனையும்
உனக்காக
திருமணம் முடியட்டும் என்று
காத்திருந்ததை நீ உணரும் பொழுது

உன் அகம் அந்த
அடையாளங்களில் ஒன்று தான்
மாறுதலின் அஸ்திவாரம்
உன் பலமான முதலீட்டைக்
கேட்கும் காலம் இது

அவள் பிரிந்த அன்னையை
உன்னிலும்
அருகில் இல்லாத பொழுது
எண்ணி வாடும் தந்தையை
உன்னிலும்
காண வேண்டும்
இது ஒரு முதலீடு

கணவன் என்று உன்னை
உணரும் முன்
நண்பனாக உணர வேண்டும்
இது இன்னொரு முதலீடு

அச்சங்களை
பேசாமலேயே அகற்றும்
அங்க மொழி
உன்னிடம் இருக்க வேண்டும்

உன் அகம் ஒரே ஒரு உறவின் வருகையில்
இவ்வளவு மாற்றம் காண்கிறது
உன் மாறிய அகம் அறி

அவள் அகத்தின் பாதிப்புகள்
அவள் வாழ்வில் இருந்து
முழுக்க நீங்க வேண்டியது இல்லை
உண்மையில் நீங்க கூடியது இல்லை

அவள் வீட்டு அருகில்
எப்பொழுதும் செழிப்புடன் இருக்கும்
இடம் பெயர்ந்ததில்
இன்று அவளுக்குக் கிடைக்க அருகிய
கோவில், பூங்கா, நட்பு,
பூக்கள், இசை ஒவ்வொன்றும்
உனக்கு தெரிந்திருக்க வேண்டும்
அவள் அகம் பற்றிய அறிவு தான்
அவள் பற்றிய அறிவு
ரத்தமும் சதையும் நுகர்வுகளும்
தாண்டிய ஜீவனாக அவளை அறிய
அவள் அகம் அறி

அவள் மீது உள்ள பாதிப்புகள்
ஒவ்வொன்றின் மூலப் பொருளும்
உன் வாழ்வில் ஏதோ ஒரு வகையில்
இடம் பெற வேண்டும் என்று அறி
கலைகள், இலக்கியம், நட்பு, சுற்றம்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு பொழுதும் அவை
இடம் பெறாமல் போகலாம்
ஆனால் அவற்றுக்கென்று ஒரு
பொழுது உண்டு
ஒன்றும் இல்லா விட்டாலும்
உங்கள் உரையாடலில்
அவற்றுக்கு ஓர் இடம் உண்டு
என்று அறி

அவள் அகம் அறிவது
அவள் வீடு சென்று
வருவதுடன் முடிவது அல்ல
தொடங்குவது

அவள் நட்பு என்பது
அவளைக் கடந்து
பற்பல காலங்களின்
போக்கில் வளர்ந்து
இன்று நிலைத்து விட்ட
ஒரு சிறிய
அவளுக்கு என்றே
உரித்தான சமூகத்தின் நட்பும் ஆனால்
ஓர் அலாதி முழுமை பெறுகிறது
அந்த அவளது மரியாதைக்கு உரிய சமூகம்
உன் மரியாதைக்கும் உரியது
அதில் ஒன்றும் ஆண் பெண் பேதங்கள் இல்லை

உன் நட்பு அவளுக்கு கிடைத்தது
அவளது ஒவ்வொரு நட்பையும் இழப்பதற்காக இல்லை
உன் முயற்சியில் ஒவ்வொரு நட்பும்
உங்கள் இருவரின் நட்பாகத் தொடர வேண்டும்
நட்புகள் அழிந்து விடக் கூடியவை
நீ அவள் அகம் அறியாத பொழுது

வளர்ந்த நட்புகள் முழுக்க முழுக்க
அவள் வாழ்வில் இருந்து நீங்குவது
உன் புதிய நட்புக்காக எப்படி இருக்க முடியும்
நண்பனே, வெற்றிடத்தில் ஏது நட்பு?

உன் உறவு ஒவ்வொன்றும்
நட்பாகும் பொழுது உன்
வாழ்வில் படரும் பசுமை
ஒரு மகத்தான இறை அருள்

அந்த இறை அருள் சூழும்
அகம் அறி!







செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

அகம் அறி


நீ வாழ்ந்த அகம்
உன்னில் ஊறியது
உனக்காக தன்னில்
மாறுதல்களை ஏற்கும்
உன் வருகைக்காகவே
காத்திருக்கும்

உன் பொருள்களை
அவை அவை
இருக்க வேண்டிய இடத்தில்
நீ வைக்கா விட்டாலும்
யாராவது எடுத்து வைப்பார்கள்
உனக்கு தெரிவிப்பார்கள்
உன்னை தெரிவிக்க மாட்டார்கள்
அது உன் அகம்

நீ போனதிலிருந்து உனக்காக
துடிப்புகளின் தனிமையை
ஒரு விதமாக ஏற்றுக்கொள்ள
முயலும் உன் அகம்
நீ அறிந்தாலும் அறிய
மறந்தாலும்
என்றும் உன் அகம்

நீ அறிந்தே கொள்ள
வேண்டியது உன்
புது அகம்
புகு அகம்

உன் கணவனை
அறிந்து கொள்ள
உதவுவதே
இந்த அகம் தான்

நீ காதலித்தே
மணந்து கொண்டிருந்தாலும்
உன் அகம் தான்
அவன் வாழும் வகை காட்டும்
ஒரு விதத்தில்
காதலில் அறிந்து கொண்டவனை
மறந்து
இந்த அகம் உடையானாக
அறிந்து கொள்வது உனக்கு
புதுமையும் வலிமையும்
ஒரு சேரத்தரும் அனுபவம்

வீட்டுக்கு இரு முகங்கள்
ஒரு புறம்
ஒரு அகம்
எப்பொழுதும் உண்டு
இரண்டும் அறிய வேண்டிய முகங்கள்

உள்ளுணர்வின் விழிப்பு
ஒன்று இருந்தால் போதும்
ஒவ்வொரு விஷயமும்
பார்வையில் படும்
தகவல்களாக
தேவைகளாக
தவிப்புகளாக
எதிர்பார்ப்புகளாக
ஒரு வீட்டின்
செங்கல்களையும்
சிமெண்டையும்
ஓடுகளையும்
கடந்த அகம்
அறியப் பட வேண்டியதொன்று

அகத்தின் ஒரு
மகத்தான தோற்றம்
காலத்தின் பரிமாணத்தின் மூலம்
கிடைக்கும்

வீட்டில் வாழ்ந்த தலைமுறைகள்
வீட்டில் வளர்ந்த உறவுகள்
வீட்டை வாழ்த்திய சுற்றங்கள்
வீட்டைத் தேடி வரும் நட்புகள்
காலத்தின் கோலங்களாக பலவும்
காலம் காலமாக சிலவும் என்று
ஒரு பரிணாமம்

இவற்றை உணர நீ
போட்டோ ஆல்பங்கள் இலிருந்து
வீட்டின் பல அறைகளில்
உறைந்த காலத் துளிகளாக
உறையும் போட்டோக்கள் வரை
புதிய உறைவிடம்
பகிரப்படும் சுய சரிதைகளில் இருந்து
பகிரப்பட மறந்த வாழ்க்கைகள் வரை என்று
எவ்வளவோ அறியக் கிடைக்கும்

காலத்தின் வேறு
ஒரு கோணம்
தினசரி அலுவல்களின்
குடும்ப வாழ்க்கையின்
அன்றாட நெருக்கடிகளில்
நெருடல்களில்
புதைந்து இருக்கும்
இவற்றுடன் பழகாத
ஒரு புது உறவின்
பார்வைக்கு அந்த கோணம்
எளிதில் கிடைக்கக் கூடும்

இவற்றை
நேர்த்தியாகவும்
இன்னும் அழகாகவும்
எல்லோருக்கும் உற்சாகம்
கொடுப்பதாகவும்
செய்ய விரும்பிப்
பார்க்கும் பார்வைகளுக்கு
இந்த அகம்
அகத்தின் அடி நாதம்
ஒரு சில நாட்களில்
அத்து படியாகும்

ஒரு விதத்தில்
அவன் அகம் அறியும் முன்னர்
அகத்தின் அகம் அறிந்தால்
அவன் தலைவனாகாமல்
தொண்டன் ஆகி விடுவான்

தான் முழுமையாகவும்
தன் வேர்களின் பலத்தின்
முழு உணர்தல் ஒன்றுடனும்
அணுகப் பட்டதில்
அவனே அவன் அகம்
அறிவதில் ஒரு புத்துணர்வு பெறுவான்

அவன் வாழ்க்கையில்
இந்த திருமணம் சில
சலசலப்புகள் வரும்
என்ற ஒரு அச்சம் இருந்திருக்கும்

அவற்றை தன் குடும்பத்தினர்
எப்படி ஏற்றுக் கொள்வார்களோ
என்று அவனுக்குள் இருந்த
அச்சம் விலகி
அவன் ஒரு புதிய அத்தியாயம்
எல்லோருக்கும் இருக்கிறது
என்று உணரும் பொழுது

அது அவனுக்கும் ஒரு
புது அகமாக தோன்றும்

அந்த
அகம் அறி!

ஔஷதம் ஆகி நோய் தீர்

நான் சமீபத்தில் எழுதிய அவ்வை மன்னிப்பாராக
உண்மையில் புது மண மக்களுக்கு அறிவுரைஆக
நினைத்து எழுதியது

ஔ அன்று விட்டுப் போனது
இன்று எழுத வந்தது

ஔஷதம் ஆகி நோய் தீர்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

இந்த சுதந்திரங்கள்

நம் நாடு
பன் முகம் கொண்டது
பல மொழிகள்
இனங்கள்
இன்னும் எத்தனையோ
வேறுபாடுகள்

சுதந்திரம் உட்பட

அறுபத்தி இரண்டு
ஆண்டுகளில் நம்
சுதந்திரம்
ஒன்று நூறாகி ஆயிரமாகப்
பல்கிப் பெருகி விட்டது

நம் கொண்டாட்டம் ஒன்று போல
இருக்கலாம்
சுதந்திரங்கள் வேறு

எல்லோருக்கும் ஒரு தாகம்
கிடைப்பது ஒரே மாதிரியான
நீர் அல்லவே?
அது போலத்தான்
ஆளுக்கு ஒரு சுதந்திரம்

ஆணுக்கு ஒரு சுதந்திரம்
இன்றும் உண்டு
பெண்ணுக்கு வேறு ஒன்று உண்டு

ஆண்டான் அடிமை இன்றும் உண்டு
வெவ்வேறு சுதந்திரங்கள்

ஜாதி அடிப்படையில்
சுதந்திரங்கள்
பங்கீடுகள் வாக்கு
வங்கிகள் -
சுதந்திரங்கள் பல வகையாகப்
பிரித்துக்கொடுக்கப்பட்டிருப்பது
மறுக்க முடியாத
இனி மாற்ற முடியாத ஒரு
நிஜம்

இந்த சுதந்திரங்களின்
முன்னே
குடும்ப ஆதாரங்கள்
அசைய ஆரம்பித்து இருப்பதும்
இன்னொரு நிஜம்

ஒன்று பெற்றோர் தோள்களில்
உலவும் சுதந்திரம்
இன்னொன்று பெற்றோர்களின்
மதிப்பீடுகளை மறுதலிக்கும்
சுதந்திரம்

சுதந்திரங்கள்
ஆயிரக் கணக்கில்
நடம் ஆடும் இந்தியா
வீட்டுக்குள்
வந்தால்
அது ஒரு வகையான
கலாசார யுத்தம் தான்

பலர் தோற்றும்
கொண்டாடும்
சிலர் சுதந்திரங்களின்
ரங்கோலியால்
மற்றவர் துயரங்கள்
வண்ணங்கள் போல்
தோன்றும்
மகத்தான வாழ்வு தான்

ஆயினும்
நான் சுதந்திரம்
கொண்டாடுவேன்
எனக்கு தெரியும்
இன்று
பல ஏழைக் குடும்பங்களில்
ஒரு புது குதூகலம் உண்டு
நாடு முழுதும்
சாலைகள் எங்கெங்கும்
மூவண்ணக் கொடிகள்
விற்றதில் ஒரு
சின்ன சில்லறை சுதந்திரம்
பல குடும்பங்களுக்கும்
குழந்தைகளுக்கும் உண்டு


ஒரு நாள்
ஒரு பொழுது
இவர்கள் வாழ்வில்
அர்த்தம் கொடுத்தாலும்
இவை
போற்றப் படவேண்டியவையே

கண்ணா உன் பாத கமலங்கள்

கோகுலாஷ்டமி அன்று
வராக வைரசின்
உயிரடியையும் மீறி நடந்த
உரியடிகள் கண்டோம்!

என் வாழ்வின்
வெவ்வேறு பருவங்களில்
வளர் பிறைகளில்
முழு நிலவாகத்
திகழ்ந்திருக்கிறது
கோகுலாஷ்டமி

கடவுளை அறிவதற்கு முன்
கலைகளை அறிந்திருக்கிறேன்
மார்கழி என்றால் கோலங்கள்
அஷ்டமி என்றால் அழகிய பாதங்கள்

என் வளரும் பருவத்தில்
அரிசிப் பஞ்சம் ஊரையே
அழுத்தப் பார்த்திருக்கிறேன்
பஞ்சத்தின் விளைவாக
வள்ளிக்கிழங்குகளும்
வேறு உணவுகளும்
உலா வரப் பார்த்திருக்கிறேன்

'எலிக் கரி தின்னச்சொன்ன
காங்கிரஸ் ஆட்சி தேவையா'
என்ற கோஷம் எங்கள் வீட்டு
சுவரில் எழுதப்படப்
பார்த்திருக்கிறேன்

முதிய அறுபதுகளில்
தார் பூசிய தபால் நிலையப் பலகைகளும்
கருப்பு சிவப்பு கொடிகளும்
இத்தகைய சுவரிலக்கியங்களும்
பல்கிப் பரவியது ஒரு
காலம் தன்னை இழந்து
வேறொரு காலத்துக்கு
வழிவிட்டதொரு காட்சி

வீடு முழுதும்
சின்னச்சின்ன பாதங்கள்
கொஞ்சிக் குழைந்து
நடமாடிப் பின்
சமையல் அறைக்கு அடுத்த
பூஜை அறையில் சென்று
சேராத,
வண்ணங்களிலும், வாசனையிலும்
திணறடிக்கும் வகை வகையான
சுபிட்சத்தின் பேரழகு கூடிய
பாரம்பர்யத்தின் இன்னொரு முகமாகப்
பரவி பிரமிக்க வைத்த
இனிப்புகளும் இன்ன பிறவும் வெண்ணையும்
இல்லாத கோகுலாஷ்டமியை
நான் பார்த்ததே இல்லை

எல்லாவற்றையும் விட
மனதில் இன்றும் இருப்பது
நேர் கோடுகளுக்குள் அடங்காத
அந்த குட்டிப்
பாதங்கள்

சில வீடுகளில்
எட்டின் மேல்
விரல் முளைத்திருக்கும்
பாதங்களுக்கு பதில்
எட்டுகள் புலப்படும்

எங்கள் வீட்டில்
தமக்கை தன் உள்ளங்கை
குவித்து வரைந்த
அந்த குட்டிப் பாதங்கள்
எங்களை
ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்

கண்ணன் வந்து
எங்கெங்கும் ஓடி
ஒளிந்து கொள்ள
ஓர் இடம்
சென்று சேர்ந்தது போல
அதில் ஒரு தோற்றம் இருக்கும்

அடுப்பின் அக்னி
சற்று இளைப்பாரியிருக்கலாம்
அக்னிக்கு அசராத எங்கள் பாட்டி
ஓயாது செய்திருப்பாள்
ஒரு நூறு பண்டங்கள்
இந்தக் கண்ணனுக்கு

பாட்டிக்கு கண்ணன்
பிரத்யட்சம் ஆவதோ
பேத்தி
பேரன்களாகவே

அந்த பண்டங்களில்
நா ஊறிய சுவை
மனதை சுண்டி இழுத்த வாசனை
எங்கள் கடந்த காலத்தில்
உறைந்து போன
மீண்டு பெற முடியாத
பிள்ளைப் பருவ அனுபவங்கள்

பண்டங்கள் எங்களைச்
சுற்றி வரும்
நாங்கள் அவற்றைச்
சுற்றி வருவோம்
ஒரு வாரம் ஆனாலும்
இந்த கண்ணன் அமுது
எங்கள் வாழ்க்கையின்
தினசரி அங்கமாக ஜொலிக்கும்
அட்சய பாத்திரம்
விட்டு விட்டுப் போயிருப்பான்!

மெல்ல மெல்ல மறையும்
அந்த குட்டிப் பாதங்கள்
நெஞ்சின் உள்ளே
சொல்லத் தெரியாத
சோகம் ஒன்றையும்
வெற்றிடம் ஒன்றையும்
விட்டுச் செல்லும்

கண்ணா உன்
பாத கமலங்கள்
கோபிகைகளும்
ராதையும்
மீராவும்
அறியாத எங்கள் எளிய
முகவரிகளில்
எப்போது வேண்டுமானாலும்
வருவேன்
அழைக்க வேண்டியதில்லை
என்று சொல்லி விட்டுச் செல்லும்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

அவ்வை மன்னிப்பாராக

அகம் அறி
ஆசை அடக்கு
இறை உணர்
ஈகை பழகு
உதவ விழித்திரு
ஊரின் எல்லை காண்
எழு ஞாயிறோடு
ஏக்கம் தவிர்
ஐம்புலனும் ஒன்ற செய்
ஒரு துணையோடு வாழ்
ஓயாமல் முயற்சி கொள்

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

சத்திய தரிசனம் -

அன்றாட நெருக்கடிகளில்
காணாமல் போய் விடுகிற
ஆத்மார்த்தமான அபிலாஷைகள் சில
அத்திப் பூக்கள் போல
எப்போதாவது மலர்வது உண்டு
நேற்று என் வாழ்வில் பூத்தது ஒரு பூ.

அம்மாவின் எழுபத்து ஐந்து வருட
வாழ்க்கையின் குறியீடான நேற்று
அம்மாவை மனைவியுடன்
சென்று
வணங்கி
ஆசீர்வாதம்
பெறும்
பெரும் பேறு கிடைத்தது

என் சிந்தைகளில்
எவ்வளவோ நான்
எடுத்துச் சென்றாலும்
அம்மாவின்
எளிமையின் முன்
அவை உருகி விடுகின்றன

ஒரு முழுமையின்
தரிசனத்தில்
ஒரு சேரும் இடத்தின்
உத்தரவாதத்தில்
ஒரு உண்மையின்
சக்தி வெளிப்பாட்டில்
என் சிந்தைகள்
திட்டங்கள்
ஆசைகள்
சர்வமும்
எளிதாகி
வாழ்வை
வாழ்வாக
யதார்த்தமாக
சந்திக்கின்றன

என்னை
என்
நிழல்களிலிருந்து
விலக்கி
நான்
நானாகிற
ஒரு மகத்தான
உண்மைத்தருணம் இது

மிக அபூர்வமாக
வெகு சில கோவில்களில்
கிடைக்கும்
அமைதி
இந்தத் தருணத்திற்குள்
வேரூன்றி இருக்கிறதை
என்னால் உணர முடிகிறது

இந்த சத்திய தரிசனம்
நித்தியம் தொடர
இறை அருள் புரிய வேண்டும்

என் எழுபத்து ஐந்தின்
காலையும்
இந்த சத்திய தரிசனம்
எனக்குக் கிடைக்க வேண்டும்
வேண்டினேன்
அம்மா மறுக்க வில்லை
அம்மாவின் அன்பு
பூட்டப்படாத கதவுகள் கொண்ட
மறுப்பின் வாசனை அறியாத
எதிர்மறை அதிர்வுகள் ஏதும் அற்ற
எப்பொழுதும்
சிரத்தை விழித்தொளிரும்
தெய்வ சன்னதி போன்றது

இங்கே
பிரார்த்தனைகள்
ஒவ்வொன்றும்
உணமையின்
ஊற்றுக்கண்ணிலிருந்து
தான் வெளிப்படும்
இந்த பிரார்த்தனைகள்
தான்
இந்த கோவிலுக்குள்
நம்மை வழி நடத்தும்
தீபங்கள்
சத்திய தரிசனத்தை
இவை
தினமும்
சாத்தியம் ஆக்குகின்றன

செவ்வாய், 28 ஜூலை, 2009

அற்புதம், ராஜ்

ராஜ்,

அற்புதம்

நம்மில் பலர்

பல காலம் கப்பலுக்குள் பிறந்து வளர்ந்து
மெதுவாக சிறகை விரிக்கக் கற்றுக் கொண்ட
பறவைகள்

வளர்ந்ததும்
பறக்க தெரியும்
ஆனால் நெடும் கடல்
கடந்து எங்கே சென்று சேர்வோம்
என்பது சரி வரத் தெரியாது

கப்பலை விரும்பினாலும்
வெறுத்தாலும் அது ஒன்றே கதி
அதன் உள்ளே உள்ள உலகம்
தான் நமக்கு
வெளியே எங்கோ இருக்கும்
அதனை உலகங்களுக்கும்
வழி காட்டி

ஒரு சில பயணிகள்
நம்மை
பொறுத்திரு
கரை சேர்வாய் என்று
வழி காட்டுவார்கள்

ஒரு சிலர் நான் இறங்கும்
துறை முகம் இது
என்னுடன் வந்து விடு
என்பார்கள்

கரை தெரியும் போது
சிறகுகள்
குறைவான தூரம்
தெரிந்த பயணிகள்
சகவாசம் என்றெல்லாம்
சுகங்கள்
பழகியிருக்கும்

வெகு சில பறவைகள்
புதிய கரைகளை
பரீட்சித்துப் பார்க்கும்

வானத்தின்
காற்றின்
தூரங்களின்
எல்லைகளின்
பழைய பழகிய
பரிமாணங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
சோதித்துப் பார்த்தபடி

ஐம்பதற்குப் பின்
புதிய பரிமாணங்கள்

அற்புதம் தான்
அது ஒரு
இறை அருள்

நீ காத்திருக்கவில்லை
பெறுவதற்கு
அவன் காத்திருந்தான்
நீ கனிவதற்கு

மீண்டும் வருவோம் - ராஜ் ச்காட்லண்டில் இருந்து

அது என்னவோ உண்மைதான்
ஐம்பதுக்கு மேல் ஆண்டுகள் கடந்த பின்தான்
தத்துவங்கள் மெதுவாக ஆக்கிரமிக்கின்றன
வாழ்கையின் ஒவ்வொரு தடத்திற்கும்
அர்த்தம் தேட வைக்கின்றன
இத்தனை வருஷமாக இல்லாமல்
இப்போது ஏன் கர்நாடக இசையில்
ஏன் திடீரென்று ஒரு ரசனை?
பகைவனின் பகைமைக்குக் கூட ஒரு காரணத்தை கண்டுபிடிக்கின்ற
பக்குவம் எங்கிருந்து வந்தது?
அட! எப்போது அளவாக உண்ணத் தொடங்கினேன்?
இப்போதெல்லாம் எலிப் பந்தயம் ஏன் என்னைத்
தொந்தரவு செய்வதில்லை
சின்னச் சின்ன வாழ்க்கைத் துளிகளை ரசிக்கத் முடிகிறது
பூக்களை, மலையை, மடுவை
வீட்டு வாசலில் ஓடி படுங்குகிரா முயல் குட்டிகளை
பார்த்து மெய் மறந்து போக முடிகிறது
இவ்வளவு நாட்களாக இல்லாமல் ஏன் இப்போது?
ஆம் ஐம்பது ஆகி விட்டது..
உண்மையான வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பிக்கிறதோ?

நன்றி கோபாலனுக்கு

முரளியின் தமிழ்ப் பற்று கண்டு மகிழ்ச்சி

மேலும் மேலும் எழுதி அனுப்புங்கள்

நான் ஒரு நம்பிக்கையுடன் ரசிகன்

கோபாலா! பாலைவனத்தில் மட்டும் தனிமை இல்லை. இங்கே குறிஞ்சி நாடுதான்; குடும்பத்தோடுதான்; ஆனாலும் தனிமை சமயத்தில் தலை காட்டுவதுண்டு.

வலைப் பயணம் ஓர் சரியான மருந்து இதற்க்கு. நேரம் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது. நேரம் கிடைக்கும்ப் போதெல்லாம் எழுத முயற்சி செய்வேன்

மீண்டும் வருவோம்

ராஜ்

என்ன ஆயிற்று கோபால் - முரளி வெ

என்ன ஆயிற்று கோபால்
வெள்ளமென சிந்தனைகள்
அணை கடந்து கடலாக..

செருப்பின் சரித்திரம்
பாதங்கள் ஓயும் வரை
பாதங்கள் ஓயட்டும்
சுவாசம் ஓயும் போது


வாழ்த்த வயதுண்டு
வாழக்கைக்கு பொருளுண்டு
பல்லாண்டு வாழ்க
எம்மை மகிழ்விக்க


அன்புடன்


முரளி

ஜோட் ரிப்பேர் - ராஜ் ச்காட்லண்டில் இருந்து

நண்பனே!

நீ எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறாய். எழுது. எழுதிக் கொண்டேயிரு.

எண்ணத்துக்கு ஒரு ஸ்பீட் லிமிட் இருந்தால் உன் எண்ணத்தின் ஸ்பீட் என்னவாயிருக்கும் என்று யோசிக்கிறேன்.

இங்கே ஒவ்வொருவர் வீட்டிலும் டஜன் கணக்கில் காலணிகள்
நம்ம ஊர் ஜோட் ரிப்பேர்க்காரனைப் பற்றி சிந்திக்கிறேன்
அவனைப்பற்றி முடிந்தால் எழுத முயற்சி செய்வாயா?

ராஜ்

பரிந்துணர்வின் எல்லை - முரளிதரன்.வெ

பரிந்துணர்வின் எல்லை

ராஜ் டிவி காட்டுகிறது
கண்ணன் என மழலையை
குறும்பு செய்வான் பொய் சொல்வான்
திருடுவான் தாயினும் சாலப்பரிவான்


அவனை வெறுப்பாரில்லை அன்றி
ஒருப்பாரில்லை அவனைக்கண்டதும்
காதல் மட்டுமே


கம்சன், துர்யோதனன் கண்டனர் ஒரு
மாயாவியை - கோபியர் கண்டதோ
அன்பின் பெருக்கை - பாண்டவர்
கண்டவன் பக்தவத்சலன்


பலர் மடிந்தனர் பலர் செழித்தனர்
உவகையும் உக்கிரமும் அவரர்
அறிந்தது - அவன் காட்டியது
அன்பு மட்டுமே


அவனை அளவிட்டவர் யாருமிலர்
அவன் அன்பின் எல்லையை எவரும்
அறிந்திலர் - போற்றுவரும் தூற்றுவரும்
அவனுக்கு சமமே.


அன்புடன்


முரளி

நன்றி ganakkirathu

அபரிமிதமான உற்சாகம் உங்களிடம் இருந்து
கடல்கள் கடந்து வந்து சேர்ந்தது

நன்றி கனக்கிறது -
என் சொற்கள் என் உணர்வின் முன்
தோற்றுப் போகின்றன

இங்கே பாலைவனத்து வாழ்க்கை
தனிமை
வெளியே எப்போதாவது
சுழலும்
தூசி மண்டலத்தைப் பற்றிய
எப்போதும் நீங்காத அசூயை
என்னை
என் ஐம்பதுக்கும் அதிகமான
ஆண்டு வாழ்க்கை எனும்
உண்டியலைத் திறக்க வைத்து விட்டன
ஒவ்வொரு காசாக எடுத்து
அடுக்கத் துவங்கி உள்ளேன்
இன்னும் வெகு நேரம் ஆகும்
எல்லாவற்றையும் அடுக்க!

மறு ஜன்மத்தில் நம்பிக்கை வருகிறது!

என் வெற்றுப் பாதங்களுடன்
மீண்டும் நடை பழகுவேன்
எனக்குப் பெரியதான ஷூக்களில்,
எப்போதும் போல.

இந்த வலைப் பயணத்துக்கு
பிள்ளையார் சுழி போட்ட
ராஜ கோபாலனுக்கு ஒரு
பிரத்யேகமான நன்றி

ஞாயிறு, 26 ஜூலை, 2009

சில செருப்புகளும் ஷூக்களும்

உலக சரித்திரத்தில்
செருப்புகளும் ஷூக்களும்
நீடித்து தடயம் பதிப்பவை
நம் இதிகாசம்
ராமாயணத்திலோ
பரதன் காத்த
பாத தூளிகைகள்
தூய அன்பின்
காலத்தால் அழிக்க முடியாத
சின்னங்கள்

புஷ், சிதம்பரம் மற்றும்
அத்வானி மூவருக்கும்
பொதுவான ஒரே விஷயம்
ஏதாவது உண்டென்றால்
அவர்களை நோக்கி எறியப்பட்ட
ஷூக்கள் தான்

நினைத்துப் பாருங்கள்
உங்கள் வாழ்க்கையில்
முதல் முதலாக நீங்கள்
பார்த்த செருப்பு யாருடையது
முதல் முதலாக நீங்கள்
பார்த்த ஷூ யாருடையது
உங்களுக்கு முதல் முதலாக
செருப்பை அணிவித்து பார்த்த
கடை எங்கே இருக்கிறது
அப்போது உடன் யார் இருந்தார்கள்
என்றெல்லாம்
செருப்புக்களும் ஷூக்களும்
உங்கள் சுய சரித்திரத்தின்
காலக் கோர்வையை
கையில் கொண்டு வந்து
கொடுத்து விடும்

நினைத்துப் பார்க்கிறேன்
நான் முதலில் பார்த்த செருப்பை
யூகிக்கத்தான் முடிகிறது
அக்கா, அம்மா, அப்பா
இவர்களின் செருப்புகளில்
ஒன்றாக இருக்குமோ
பாட்டியின் செருப்பைப்
பார்த்ததாகவே நினைவில்லை
இது என்னை நெருடி உலுக்குகிறது
பாட்டி எப்போதாவது அணிந்திருப்பார்
வேண்டும் என்னும் போது
என்று சமாதானம் செய்து கொள்கிறேன்

அம்மா செருப்பு தான்
நினைவில் வருகிறது
அம்மாவின் செருப்பு பெரியது
கடையில் பெண்கள் பகுதியில்
கிடைக்கவே கிடைக்காது
பாதம் பெரியது என்பதால்
ஆண்களுக்கான செருப்பை தான்
வாங்க வேண்டும்
அப்பாவின் செருப்பும் நினைவுக்கு
வந்தாலும் அவர் காட்டிய
புரிந்து கொள்ள முடியாத
கோபங்கள் இப்போதும் அவை மீது
என் நினைவுப் பார்வையை
தவிர்க்க செய்கின்றன

என் வீட்டு மனிதர்கள்
யாருக்கும் பொதுவாக
ஒரு ஜோடிக்கு மேல்
செருப்புகள் இருந்தது இல்லை
ஒரு ஜோடியின்
விதிக்கப் பட்ட
வாழ்க்கை நீட்டிக்கப்பட்டு
அதுவும் முடிந்த பின் தான்
அடுத்த ஜோடி
இப்போது போல ஷூ ராக்கை
திணறடிக்கும் பற்பல ஜோடிகள்
எங்கள் காலத்தில்
அல்லது எங்கள் குடும்பத்தில்
இருந்தது கிடையாது
எங்கள் வீட்டின் ஒரே
சிறு பெண் தமக்கையைக் கூட
நிறப் பொருத்தத்துடன்
காலணி அணிந்து பார்த்து இல்லை

மகாத்மா காந்தியை
மிகச் சுலபமாக
அடையாளம் காட்டியவை
அவர் கண்ணாடியும், காலணிகளும்
மற்றும் அந்தக் கைத் தடியும் தான்

இன்றும் இவற்றை மட்டும்
வரைந்து விட்டு மற்ற இடத்தை
வெற்றிடமாக விட்டு விடுங்கள்
ஓர் இனம் புரியாத சோகம்
உங்களைக் கவ்வினால்
ஆச்சர்யப் படுவதற்கு இல்லை

நம் கடந்த காலத்தின்
சுவடுகளின் ஒருமித்த
உருவகம் ஆகும்
இந்த செருப்புகள்
நம் எதிர் காலத்தின்
விளிம்பில் நின்று நம்மை
நாம் கற்பனை செய்து
கொண்ட,
நம் வார்ப்புகளின்
முன்னோடியாகவும் இருந்ததுண்டு

எப்போ நான் பெரியவனாவேன்
என்ற கேள்வி நம்
மனத்திரையிலோ
நாக்கிலோ
நடம் ஆடுவதற்கு முன்னால்
நம் பாதங்களால்
ஒத்திகை செய்யப்படுவது
பாதங்களை விடவும்
பெரிய செருப்புகள் மூலம் தான்

இந்த கேள்வி
நம்மை விட்டு எப்போதாவது
நிரந்தரமாக
விலகியதா என்று
சொல்வது கூட கடினம் தான்

நம் பாத அளவு
முடிவாகிப் போன போதும் கூட
எப்போ நான் பெரியவனாவேன்
என்னும் கேள்வி நம்
பாதங்களை
நம் செருப்புகளை விடப்
பெரிய செருப்புகளைத்
தேடி
அணிந்து பார்க்கச்
சொல்லிய வண்ணம்
தான் இருக்கின்றது

எங்கள் வீட்டு வாசலில்
மாலை நேரம்
ஏகப் பட்ட காலணிகள்
விதம் விதமாய்
பார்த்திருக்கின்றேன் இளம் வயதில்

இவற்றின் உரிமையாளர்கள்
அம்மாவின்
வகுப்புக்காக காத்திருக்கும் நேரம்
சாயும் காலம் மரங்களில் அமர்ந்து
சல சலக்கும் பறவைகள் போல்
பேசும் பாலகர்கள்
பெரும்பாலும் சிறுமிகளின்
குரல்களின் ஒருமித்த சத்தத்தில்
எனக்குக் கிடைத்த
இனம் புரியாத நல்லுணர்வு
அறிவைப் போல்
அதைப் பகிர்வதைப் போல்
உலகம் முழுதும்
நாடக் கூடிய
செழுமையோ வளமையோ ஒன்று
இல்லை என்றே என்னுள் பதிந்தது

அந்த செருப்புகள் அத்தனையும்
அகன்ற பின்
வீட்டினுள் நிலவும்
பேரமைதியின் இடையில்
வாசலில் ஓய்வெடுக்கும்
தன் தேய்ந்து போன
செருப்புகள் அளவு கூட
ஓய்வெடுக்க இயலாத
அன்னையின் அருகே எரியும்
மேஜை விளக்கும்
அவரது காலத்தை
சோதித்து வெல்லும்
படிப்புகளும்
எனக்குக் கொடுத்த
இனம் புரியாத
சாதனை வேகம்

இன்றும் என்னை என்
பாதங்களுக்குப் பெரிய
ஷூக்களில் நுழைந்து
நடை பழகிப் பார்க்கும்
இடறி விழுந்த போதும்
எழுந்து மீண்டும் முயலும்

துணிவுக்கு
துணை போகின்றது

நம் பயணங்களில்
சிலர் செருப்புகளும்
சிலர் ஷூக்களும்
தொடரும் போது
தலை முறை தலை முறையாக
தொடரும்
போராட்டப் பயணங்கள் கூடப்
புரியத் தான் செய்கின்றன

(பயணம் தொடரும்
பாதங்கள்
உறங்கும் வரை)

சனி, 25 ஜூலை, 2009

இன்று ஒன்று

இரவின் வெளிச்சங்கள் என்
இதயம் வரையும்
ஒரு புதிய நாளின்
உதயம் வரையும்

தங்களைக் கரைத்துக் கொண்டு
இந்த வெளிச்சங்கள்
உறக்கத்துக்குப் பின்னர்
விழிப்புக்கு முன்னர்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
என்று உபசரிக்கும்
நான் உறங்கும் வரை
காத்திருந்து அனுசரிக்கும்

நேற்றின்
தடயங்களை
அழித்துக் கொடுக்கும்
ஒரு புதிய சாலையை
ஒரு புலர்ந்த காலையை

ஒரு மகத்தான
பிரகாசத்துடன்
உயிர் துடிப்புடன்
இயங்கும் நகரம்
கை கட்டிக் கொண்டு நிற்கும்
'ஏவு, என்ன வேண்டும்?'
என்று கேட்கும் பட்டணத்து பூதம் போலும்

நூறாயிரம் புது உயிர் செல்களை
இந்த முடிந்த இரவு
என்னிடம் ஒப்படைத்து விட்டு
தூக்கம் கலங்க நிற்கும்
பள்ளிக்கு என்னை அனுப்பி விட்டு
தெரு முனையில்
என் உருவம் கரையும் வரை பார்த்த
என் அன்னை போலும்
'இன்று போய் இன்றே வா' என்னும் பாவத்துடன்

குளிப்பதற்கு முன்னும், பின்
அலுவலகம் அடைந்ததும்,
பிறகு சந்திப்புகளிலும் என்று என்னை
என் நாள்
பற்பல உபசரிப்புகளுடன் கொண்டாடும்

நூறு செய்திகள்
கலந்துரையாடல்கள்
இறந்த காலத்தின் எச்சங்கள்
நாளையைப் பற்றிய அச்சங்கள்
இன்னும் எத்தனையோ மிச்சங்கள்

பணிவிடத்தின்
வெள்ளை காலர் துரைத்தனங்கள்
மதிய உணவுடன்
புதிய பானங்களுடன்
சிலரின் புகை வெளிப்பாடுகளுக்கு இடையே
சுழலும்

இரவின் வெளிச்சங்கள்
மீண்டும் தழுவும் சமயம்
பழகிய தலைக்கடியில்
இன்று முழுதும் இது
என்ன செய்து கொண்டிருந்தது என்று
கேட்க நினைத்தும்
'நமக்கென்ன ஆயிற்று'
என்று முனகிய படி
அந்த இரவின்
கடைசி ஒளிதுளியின்
பிரிவுக்கு தயாரான படி,
நெளிந்த படி
அடங்கிப் போகும்
என் தலையணை
என்
இன்று
ஒன்று போலவே!

புதன், 22 ஜூலை, 2009

மீண்டும் இவள்.....

யுகங்கள் மாறினால் தான் என்ன
நகங்கள் கீறினால்
ஆறுமோ காயங்கள் ?

மீண்டும் இவள்
புறப்பட்டாள்

வீட்டில்
வெளியில்
நெரிசலில்
அலுவல் வழிசலில்

மீண்டும் இவள்
புறப்பட்டாள்

குடும்பம் என்னும்
ஒரு கனவை
ஒரு பிடிப்பை
ஒரு துணையை
ஒரு விழிப்பை
விட முடியாது
மீண்டும் இவள்

கருக்கலில்
சமையலில்
கரை சேர முடியாத
நெருக்கடிகள்
அலைகளைப் போல்
நெருடலுடன் தொடர்கின்ற
நெருஞ்சிமுள்
படுக்கையில் சாயும் வரை
நூறு முறை
மீண்டும் இவள்

தன் கண்களின் ஈரத்தை
சிறிதளவு
பகிர்ந்து கொள்ளலாம்
என்ற நப்பாசையில்
வீடு திரும்பும் போதெல்லாம்
இவள் ஓரப் பார்வைகள்
சந்திப்பதோ

ஏற்கனவே
நனைந்திருக்கும்
ரோபோக்களின் கண்கள்,
கேளிக்கைக்கு
இழந்த
இவற்றின் ஈரம்
மீண்டும் வனவாசம்
சென்ற சீதைக்காகவா
அல்லது
சுயம்வரம்
விளையாடும் நடிகைக்காகவா
என்று புரியாதபடி!

யுகங்களின்
மாறுதல்களைப்
புறக்கணிப்பதே
ஒரு தவம் போலும்

சளைக்காமல்
அடுக்களைக்குள்
செல்வாள்

மீண்டும் இவள்!






ஞாயிறு, 12 ஜூலை, 2009

திருமூர்த்தி அணையில் புதைந்த வரலாற்று சின்னங்கள்

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=1362

இன்று கோவில் கோவிலாக

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த

ஓவியங்கள் அழிக்கப்பட்டது பற்றிய

செய்தி இந்து நாளிழதில் வந்து

ஆறாத காயத்தை

மனதுக்குக் கொடுத்தது

.............

இந்த செய்தி ஒரு

சிறு ஒத்தடமாக

அமைந்தது போலும்

....

நன்றி, தினமலரே, நன்றி!

வெள்ளி, 3 ஜூலை, 2009

என் மதம்

நான் வாழ்ந்த ஊர்களிலே
நதிகள் ஓடியதில்லை
திருச்சி ஒன்று தவிர
ஆனால் நீர்நிலைகள்
ஒவ்வொன்றும் என்னை
ஏதோ ஒரு வகையில்
பாதித்திருக்கின்றன

நீர் நிலைகளின் ஒரு புறம் நான்
மறு புறம் யார் என்று தெரியாது
இடையே ஓடியபடி அல்லது
அலைந்த படி
இந்த நீர்நிலைகள்
என்னை அதிகம் யோசிக்க விட்டதில்லை

இவை
என்னை
எனக்குக் காட்டிய
அதிலும்
என் கலைந்த
நிஜ நிழல்களின் கலவையாய்
நீரில் வரைந்த பின்
நீரில் கரைந்த அந்த
முக வரிகள் அளவு கூட
நீருக்கு அப்பால் உறைந்த
முகவரிகளைக் காட்டியதில்லை

என் மதமும் ஒரு வகையில்
இந்த நீர் நிலைகள் போலத்தான்
இவை என்னை எனக்குக்
கலைந்து விடும் முக-வரிகளாகக்
கொடுக்கின்றது
எனக்குத் தெரியாத கரை ஒன்றை
என்னிடம் மறைத்து விட்டு
என்னிடம் எனக்கென்று
நான் மறுக்கவும்
இதோடு ஒன்றிப் போகின்ற
தருணங்களைக் கடந்து
காக்கவும் முடியாத
கலைந்தும் கரைந்தும் போகும்
முக-வரிகளைக் கொடுக்கின்றது

நான் இதன் மறு பக்கம் சென்று
இதை எனதாக்கிக் கொண்டால்
இது எனக்கு இன்னும் புதிதாக
என்ன தரும் என்று தெரியாது

ஆனால் அதில் ஒன்று தெரிவது மட்டும்
நிச்சயம்
அந்த முகவரிகளில் இருப்பது
கலைந்தும் கரைந்தும் நான் மீண்டும்
மீண்டும் காண்பது என் முகமாகத்
தான் இருக்கும்
அதே முகம் தான்
என் வீட்டில் தெருவில் நகரத்தின்
முடுக்குகளில் வாகன நெரிசலில்
பல யோசித்துத் தழுவி விட முடியாத
பற்பல தருணங்களில் நான்
நின்று ஒரு கணம் கூடப் பார்க்க வேண்டும்
என்று முயலாத அதே
முகமாகத் தான் இருக்கும்

என் மதம் நான் எங்கு சென்றாலும்
நான் அறிந்த ஒரு பக்கம் தான்
நதியின் அல்லது வேறு நீர் நிலையின்
மறு பக்கம் என்னிடம் எப்போதும் இல்லை
என் முகவரி என்னிடம் எப்போதும் உண்டு

என் மதம் என்பது
என் முகவரியில்
ஒரு வரி
- அவ்வளவு தான்
உண்மையில்
என் சக மனிதனுக்கு
என்னை அடையாளம்
காட்டுவது இல்லை
அந்த ஒரு வரி
ஆனால் கடவுளை
நான் வழிபடுகிறவன் என்பதற்கு
ஒரு சின்ன அடையாளம் மட்டுமே
அந்த ஒரு வரி

எனக்குப் புரிவதெல்லாம்
என்னை அணுகும் தபால் காரருக்கு
என்னை என்
விலாசத்தில்
பார்த்துவிட முடிகிறது

என் முகவரி தெரியாதவர்களிடம்
நான் எப்படி சொல்வேன்
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும்
மதம், ஜாதி, நிறங்கள் நான் இல்லை என்று

என் முகவரியில் நான் என்னை
என் மதிப்பீடுகளாக அடையாளம் காண்பேன்
தயவு செய்து இந்த முகவரிக்கு எழுதுங்கள் என்று

எப்படி சொல்வேன்
எத்தனை முறை தான் சொல்வேன்
தெரியவில்லை

இந்த நீர் நிலைகள்
நதிகள் உட்பட
என் வாழ்க்கையை இன்றும்
பாதித்த படித்தான் இருக்கின்றன
நானும் என் முகவரியை
இந்த பேதங்கள் என்னும்
காட்டாருகளுக்கும் இடையே
கரைந்து விடாதபடி
தற்காத்துக் கொண்டு தான் வருகின்றேன்

எனக்கு
இரண்டும் தான் வேண்டும்
என் முகவரி அந்த நீர் நிலை
நதியோ, ஏரியோ
நான் வளர்ந்த
என்னுடைய
என்னை எனக்குக் காட்டிய அந்த
நீர்நிலைகள்
என் வாழ்விலிருந்து
அகலப் போவதில்லை.........

திங்கள், 29 ஜூன், 2009

muzhumai

இதோ நான் என் காலங்களில்
கால் நனைத்து நிற்கும் பொழுது
நான் முழுமையைத் தழுவிய
அல்லது முழுமை என்னை
அணைத்துக்கொண்ட சில தருணங்கள்
அலைந்து கலைகின்றன

நான் பண்ணறேன் என்று
குழிபிறை வீட்டு வாசலில்
என் சிறிய சமையல் கட்டில்
ஆழ்ந்து சமைத்துக் கொண்டிருந்த பொழுது
என்னையும் தமக்கையையும்
சாப்பிட வரச் சொல்லி வீட்டின்
உண்மையான தளிகையுள் இருந்து
வந்த பாட்டியின் குரலில் ஒரு முழுமை இருந்தது

மெலிந்த உடலுக்கும் ஒரு மெருகு உண்டென்று
கனிந்த பார்வையில் சொன்ன தாத்தாவின்
தோற்றத்தில் இருந்த முழுமை என்னை தழுவிய
கணங்கள் இன்றும் என் வாழ்வுத் தறியில்
பிணைந்த நூலாக இன்றும் இழைகிறது

பள்ளி செல்ல என் பாட்டி என் கையில்
கொடுத்த அன்று கடைந்தெடுத்த புது வெண்ணையில்
இருந்த முழுமை பின்னர் என் வாழ்வில்
பெருகிய அத்தனை நெய்யிலும் கிடைக்கவில்லை

பள்ளி செல்லும் வழியில் நான் என்னை
மறந்து பார்த்து ரசித்த
புல் இதழ்களின் மேல்
தாழ்ந்து வரும் காற்றில்
சிலிர்ந்து கொண்டிருக்கும்
இன்று வரையிலும் நான் இனம் பெயர் அறியாத
அந்த வெள்ளைப் பூக்களில் இருந்த
முழுமை பின்னர் நான்
பார்ததுப் பார்த்துப் பூரித்த
ஹாலந்து துலிப் தோட்டங்களில்
கிடைத்ததா என்று என்னால்
உறுதியாகச சொல்ல முடியவில்லை

நாள் என்ன பொழுதென்ன என்று
கிட்டிப் புள் விளையாட போன
புழுதியில் எழுதிய அந்த
கோடை விடுமுறைகளில் இருந்த
முழுமை பின் யுரோப்ஐ சுற்றிய போது
கிடைத்ததா? சொல்ல முடியவில்லை.

(முழுமை முழுமை அடைய மீண்டும் முயற்சிக்கும்!)

புதன், 13 மே, 2009

ஞாயிறு, 10 மே, 2009

என் கலந்த உணர்வுகள்

என் கலந்த உணர்வுகள்
என்னை அந்த தங்க சுரங்கத்தின்
வெளியே கொண்டு வந்து விட்டிருப்பது
தவிர்க்க முடியாததாகிவிட்டது

என்னை இந்தியா அழைத்தது
இல்லை இல்லை
என் தாய் அழைத்தாள்
என்றால் உங்களுக்கு என்ன
எனக்கே கூட
ஆச்சரியமாகத் தான்
இருக்கிறது

நான் உரிமை எடுத்துக்கொள்ளக்
கூடிய உறவுகளுடன் எல்லாம்
நான் சமீப காலமாக வேண்டினேன்
தங்கள் வாக்கை வீண் செய்யாதீர்கள்
வாக்கு போடுங்கள் என்று

என்னிடம் வலையில் வந்த
சில தபால்கள் வாக்கை வீண் செய்ய
வேண்டாம் யாருக்கும் அதைப்
பெற தகுதி இல்லை என்றெல்லாம்
வந்த இந்த தபால்கள்
என்னை ரொம்பவும் பாதித்தன

நான் பல சமயம் வியந்ததுண்டு
இந்த விவாதங்களில் ஓங்கும்
குரல்களுக்கு சொந்தக்காரர்களில்
எவ்வளவு பேர் உண்மையில்
வாக்குச் சாவடி சென்று
தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி
வேட்பாளர்களில் ஒருவரின் மீது
நம்பிக்கை வைத்து வாக்குச்
செலுத்தப் போகிறார்கள் என்று?

ஆனால் உலக அறிவிலும்
நாட்டு நிலவரத்திலும்
அறிவார்ந்த இவர்கள்
யாருக்கும் வாக்கு செலுத்த
வேண்டாம் என்று ஒரு
உரத்த சிந்தனை பரப்புவார்கள்
என்று என்னால் கற்பனை
செய்து பார்த்திருக்க முடியவில்லை

நான் இந்த வலைக்கடிதத்துக்கு
என் உணர்ச்சி பூர்வமான ஒரு
பதிலை நம் முன்னோர்கள்
போராடிப் பெற்ற இந்த
வாக்கை நீங்கள் வீண் செய்து விடாதீர்கள்
உங்கள் வாக்கை செலுத்துவதுதான்
அதனை உயிர்த்யாகம் செய்து நமக்காக
போராடிப் பெற்ற
சுதந்திரப் போராட்ட
த்யாகிகளுக்கெல்லாம் நாம் செய்யக்கூடிய
மரியாதை

ஜாதி மதங்களைப் பார்க்காமல்
நற்பணியை சீர்தூக்கிப் பார்க்கத் தெரிந்த
நாம் எல்லாம் விலகுவதால்
தேசம் பிரிவதற்கு உதவும்
வாக்கு வங்கிகள் இன்னும் வளரத்தான்
செய்யும்
அது நாம் தேசத்துக்கு செய்யும்
நற்செயல் ஆகாது என்றெல்லாம்
என் கோரிக்கை உணர்ச்சிகள் பொங்கிட
வலை போனது!

இப்படி நான் எழுதுவதற்கு
ஒரு வாரம் முன்பு தான்
ஏதோ ஒரு தவறான உடல் பயிர்ச்சியாலோ
என்ன காரணத்தினாலோ
என் இடது முழங்கால்
முழுதும் இயங்காமல்
முரண்டு பண்ண
அலுவலகம் சென்று வருவதே
பெரிய சவால் ஆனது

இதோடு ஆன்லைன்
முன் பதிவும் கெட
நான் வாக்குக்காக போக
இருந்த என் பயணத்தை
ரத்து செய்தேன்
என்னைப் போலே
வெளி நாட்டின் மூலைகளில்
வாக்குப் போட முடியாமல்
தவிக்கும் லட்சோப லட்ச
இந்தியர்களை நினைத்து
எனக்கு நானே ஆறுதல்
சொல்லிக் கொண்டேன்
இதற்கு தீர்வு
பயணம் அல்ல
தேசமும் ஒவ்வொரு வாக்கும்
வீணாகாமல் பெறுவதற்கு
தேர்தல் ஆணையம்
ஏதாவது செய்யத்தான்
வேண்டும் என்று கூட நினைத்தேன்

மனைவியிடம் வரவில்லை
என்று கூட தெரிவித்தேன்

நான் சில மௌனங்களைப்
பற்றி எழுதி இருந்ததைப் போல்
என் ஊருக்கு உபதேசத்திற்கும்
என் வாக்குப் போடாத
வெளிநாட்டு வாசத்திற்கும்
இடையே
என்னைக் கேள்வி கேட்கிற
என்னை எனக்கே மீட்கிற
ஒரு மௌனம்
எனக்குக் கிடைத்தது
என்னை இந்திய அன்னை
நினைவூட்டி அழைத்தது போல்
இருந்தது

அம்மாவிடம் நான் வருவதை
சொன்ன பொழுது
அம்மா சொன்ன வார்த்தை
என் கலந்த உணர்வுகளுக்கு
உரை எழுதியது போல்
இருந்தது:

"இந்த முறை
இந்தியாவுடைய
குடிமகனாக வரேன்னு
சொல்லு"

அன்னை அறியாத பிள்ளை மனசா?

தமிழமிழ்தில் எழுத ஆரம்பித்து
நாளை முதல் முதலாய் ஒரு நாள்
நான் எழுத மாட்டேன்
ஆனால் என் சிந்தனை ஓட்டங்கள்
மேகங்களுக்கிடையே
தமிழமிழ்தின் பக்கத்திலேயே
சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும்

நானும் என் கலந்த உணர்வுகளும்
ஒருவரை ஒருவர் சுற்றி சுற்றி வருவது போல்!







சனி, 9 மே, 2009

இரண்டாம் வகுப்பு என் முதல் வகுப்பு

இந்த பள்ளிகளின் நினைவலைகள்
என்னை நன்றாக சூழ்ந்து கொண்டு விட்டன
என் இரண்டாம் வகுப்பு தான்
எனக்கு முதல் வகுப்பு
எனக்கு இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது
ஒரு முழு வருஷம் எழுதப் படிக்கக்
கற்றுக் கொள்ளாதவன்
இரண்டாம் வகுப்பில் எப்படி
நன்றாகப் படித்தேன் என்று

ஸ்லேட்டு நிறைய
நான் எழுதத் தொடங்கியது எல்லாம்
இந்த இரண்டாவது வகுப்பில் தான்
என்னை ஒரு படிக்கும் சமூகத்தின்
அங்கமாக நான் உணர்ந்து கொண்ட
முதல் வருடம் அது

எங்கள் வாழ்க்கையில் இந்த ஒரு
மாற்றம் முக்கியமானதாக
இருந்தது
முதல் முறையாக வீட்டுக்கும்
பள்ளிக்கும் இடையில்
மோட்டார் வாகனங்கள்
போகும் சாலைகள் இந்த ஊரில் தான்
சமாளிக்கக் கிடைத்தன

துறையூர்
ஆயிரத்து தொளாயிரத்து அறுபதுகளில்
இன்றைய துறையூரை விட சிறியதுதான்
என்றாலும் சாலைகளும் வாகனங்களும்
பெருகிய ஒரு பரபரப்பான ஊராகத் தான்
இருந்தது

இந்த அறுபதுகளில்
அக்காவின் பிஞ்சு விரல்கள் தான்
எனக்கும் என் தம்பிகளுக்கும்
பாதுகாப்பு
இந்தப் பாதுகாப்பு நீடிப்பதற்காக
எங்கள் அக்கா எட்டாவது
வரை ஒரு ஆரம்பப் பள்ளியில்
படித்தது எங்கள் குடும்பத்தின்
த்யாக குணங்களையும்
தலைமை குணங்களையும்
ஒரு சேர பெண்கள்
பெற்றிருந்ததற்கான
அதன் பலன்களை நாங்கள்
(மகன்கள்) முழுதும்
பெற்றதற்கான எத்தனையோ
உதாரணங்களில் ஒன்று

என் பள்ளிப் பருவ நினைவுகள்
பல்கிப் பெருகுகின்றன

இந்த எழுத்துக்கள்
இப்போதைக்கு என் பள்ளிக்கூடங்களை
வகுப்புகளை தெரு விளையாட்டுக்களை
வலம் வருவது தவிர்க்க முடியாததாகிறது

நினைவுகள் காலத்தின்
சுரங்கத்துக்குள் சென்று விட்டால்
வெளியே வருவது சிரமம் தான்
அதுவும் அந்த சுரங்கம்
தங்கச் சுரங்கம் என்னும் போது

வெள்ளி, 8 மே, 2009

என் முதல் பள்ளிகள்

என் முதல் இரண்டு பள்ளிகள்
நினைவுக்கு வருகின்றன
ஒன்றில்
பட்டாம் பூச்சியை
பார்த்துக் கொண்டே
கான்க்ரீட் பள்ளியை விட்டு
விலகி ஓடியது
ஞாபகம் வருகிறது
இந்தப் பள்ளி நான் படித்த
பள்ளி அல்லவே அல்ல
அன்னை ஆசிரியை என்பதால்
எனக்குக் கிடைத்த
சலுகை இது

இரண்டாவது பள்ளியில்
எனக்கு ஒழுங்காக
கான்க்ரீட் பள்ளியை
நோக்கி போவதற்கான
கன்னி முயற்சிகள் ஓரளவு
நிகழ்ந்தேறின

இதில் என்னை ஊக்குவிப்பதற்கு
கையில் வீட்டில் கடைந்தெடுத்த
வெண்ணெய் பாட்டியிடம் இருந்து
கிடைத்தது இப்பொழுது கூட அதன்
தடயம் கையில் இருக்கக்கூடுமோ என்று
நினைக்கத் தூண்டும் அளவுக்கு
ஞாபகம் இருக்கிறது

இங்கும் கான்க்ரீட் பள்ளிக்கு
வெளியே பசுமைகள் மனதில்
பளிச்சென்று தோன்றத்தான் செய்கின்றன

ஒரு பெரிய கிராமம் போலவேதான்
இருந்த சிறு நகரம் ஒன்றிற்கு
இடம் பெயர்ந்த போது
கான்க்ரீட் பள்ளியின் சத்தங்கள்
சூழ்ந்த சுவர்களால் பிரிக்கப்படாத
வகுப்புகள் வாழ்க்கையில்
தொடங்கியதும்
உடன் படாத குழந்தைகள்
காதுகள் ஆசிரியரின்
விரல்களுக்கு மிகவும் பிடிக்கும்
என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக
புரியலானது

பள்ளிக்கு வெளியே
உடனேயே தெரு
எனக்கு பிடித்த பசுமைகள்
பள்ளிக்கு உள்ளே இருந்தன

கான்க்ரீட் உள்ளே
கரும் பலகைகள் என்
மனதில் பதிய ஆரம்பித்த
அந்த நாட்களின் வாசனை
இன்றும் என் நினைவலைகளில்
பரவ வல்லது












இன்னொன்றில்

வியாழன், 7 மே, 2009

சில மௌனங்கள்

சில மௌனங்கள்
ஓசையை மிஞ்சி விடும்
மனதின் உள்
சலனம் ஏற்படுத்துவதில்

சிறு வயதில் சகோதரர்களுடன்
ஏற்பட்ட சண்டை சச்சரவு
பெரியவர்களின் மத்யச்தத்தில்
முடிவுக்கு வந்ததும் ஏற்படும்
மௌனம் ஒரு மாதிரி தான்

மனைவியிடம் விவாதம்
கசப்பாக முடிவது
ஒரு மௌனத்தில்
கொண்டு விட்டு விட்டால்
அன்று முழுதும் இந்த மௌனம்
ஒன்று போதும்
மனதை நாள் முழுக்க
அலைக்கழிக்க

ராத்திரி விவாதம் மகளோடு
ஏற்படாமல் இருந்தால்
தேவலை
அவள் முதுகைக் காட்ட
ஆறுதல் சொல்ல நினைத்தால்
எச்சரிக்கை உடனே வந்து விடும்
என்னதான் இருந்தாலும்
குழந்தையிடம் நீங்கள்
இப்படி பேசியிருக்க வேண்டாம் என்று
அதன் பின் வீட்டில் சூழும் மௌனமோ
கோரம்

நாள் முழுதும் குழந்தையுடன்
உறவாடும் அன்னை ஒருத்தி
சொன்னால் அது
தூங்கும் போது வீட்டில்
நிலவும் மௌனம்
ரொம்பவும் கோரமாக இருக்கிறது என்று

மரணத்துக்கு பிறகு
ஒரு வீட்டில் நிலவும்
மௌனம் தான் எவ்வளவு
கொடுமையானது
அதன் அழிவு பூர்வமான
சக்தியை சமன் செய்யத்தான்
எவ்வளவு ஒப்பாரி தேவையாக இருக்கிறது

விவாதம் இருக்க வேண்டிய
மேலாண்மைத் தளங்களில்
மௌனம் ஆளுமையின்
மரணத்தைப் போல் ஆகிறது

திரௌபதியின் வஸ்திரம் அபகரிக்கப்பட்ட
போது சபையில் நிலவிய மௌனம்
கொடுமையானது
ஆண் வர்க்கத்தை இன்றும் தலை
குனிய வைப்பது

கொலையுண்ட மக்களின்
சந்ததியினர் வருடக் கணக்கில்
சந்திக்கும் நீதி மன்றங்களின்
மௌனம்
ஒரு தேசத்தையே
பாதிக்கப்பட்ட சமூதத்தின் முன்
தலை குனிய வைத்துவிடுகிறது

அடித்தட்டு மக்களின்
மீது இழைக்கப் படும் கொடுமைகளுக்கு
அவர்கள் கட்டும் மௌனம்
அடிமைத்தனம் என்றால்
அதை எதிர்த்து மேல்தட்டு
மக்கள் மௌனம் சாதித்தால்
அது பேடித்தனம்

ஒரு அநியாயத்தை எதிர்த்து
பேசாது மௌனம் சாதிப்பது
அதற்கு துணை போவதற்கு
சமானம் ஆகும்

மௌனங்கள் அநேகமாக
நம்மை நமக்கு
அடையாளம் காட்டும்
கருவிகள் தான்

நன்றி சொல்லும் பொழுது
வார்த்தைகள் கிடைக்காமல்
போகும் மௌனம்
மகிழ்ச்சி மேலீட்டில்
கண்கள் நனைந்து தோன்றும்
மௌனம்
ஒவ்வொரு மௌனமும்
அழகு தான்

பிரிவில் தோன்றும் மௌனம்
காதலரை வாட்டி விடுகிறது
இன்றைய சாதனங்கள்
ஒலி வெள்ளத்தில் அமிழ்த்தினாலும்
அந்த வெள்ளம் வடிந்து
பெருகும் மௌனம்
அலாதி தான்

கொலையின் முடிவில்
கசியும் மௌனம்
கொலைகாரனையும்
கலங்க வைத்து விடும்

துரோகத்துக்கு பதில்
ஆவேசமான பேச்சு
கிடைத்தால் ஒரு விதத்தில்
அந்த துரோகம்
கையாளப்பட்டு விடும்
அதற்கு பதில் மௌனம்
கிடைத்தால் அது நரக வேதனை
தான் தரும்

ஆக மௌனங்களின் முன்
வார்த்தைகள் ஒன்றும் இல்லை
மனசாட்சி போல
உரத்த மௌனம் உலகில்
ஏதும் இல்லை
அதை பேச விடு
கூர்ந்து கேள்
உன் வார்த்தைகள் குறையும்
மௌனங்கள் மிகும்
அதனுடன் செயலும் திறனும்

மௌனம் பழகு
அது மனத்தின்
ஆத்மாவின் அழகு!







புதன், 6 மே, 2009

தமிழன் ஒரு கேள்விக் குறி?

யாம் அறிந்த முதுகுகளில்
தமிழன் முதுகு போல்
வளைவாவது எங்கும் காணோம்!

தமிழன் வளையும் போது
விடையும்
நிமிரும் போது
கேள்வியும் ஆகிற
வினோத பேர்வழி

ரசனை இவனுக்கு பிரதானம்
ஒரு நல்ல ரசிகனாக
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
தமிழன் எவ்வளவு தொலைவும்
செல்வான்

தலைமை இவனுக்கு பிரதானம்
தலைவன் என்று ஒருவரை
ஏற்றுக் கொண்டு விட்டால்
இவன் தலைவனுக்கு
தன் தலையையும்
கொடுக்கத் தவற மாட்டான்

இவன் வெளியுலகம்
முழுவதையும்
ரசித்து ஏற்பவன்
பிற மொழிகளை பேசுவான்
அவற்றில் தமிழ் தொனிப்பது
கேலிக்கு ஆளானாலும்
இவன் பொருட்படுத்துவதில்லை

தமிழனை ஆளுவது
பொதுவாக சுலபம்
பணியிடம் ஆனாலும் சரி
தன் மேலாளர் ஆனாலும் சரி
தன் நல்ல பெயர் கெடக் கூடாது
என்பதற்காக
உயிரையே விடுவான்

தமிழன் முதுகு
எல்லாருக்கும் பிடித்திருப்பதில்
ஆச்சர்யப் படுவதற்கு
ஒன்றும் இல்லை
தலைமையின் முரண்பாடுகள்
இவனுக்கு ராஜதந்திரத்தின் ரசனை

கால காலமும்
ஒரு தலைமை
அதற்காக ஒரு உயிர்
அதற்காக ஒரு உடல்
அதற்காக ஒரு பிறவி
ஒரு முதுகின் மேலே
ஒரு குடும்பம்

இத்தனை அழகில் ஒளிரும்
முதுகின் மேலே
உப்பு மூட்டை விளையாட
யாருக்குத் தான் ஆசை வராது?
இத்தனை கட்சிகள்
உதயம் ஆனதில் என்ன
பெரிய ஆச்சர்யம்?
ஏந்தி நிற்க இத்தனை
முதுகுகள் இருக்கையில்
ஏறி அமர தலைவர்கள்
குறைவாக இருந்தால் அது
தமிழனுக்கு எவ்வளவு
அவமானம்!

சுமை தாங்க ஏங்கும்
தமிழன் சுமைகள்
போதுமான அளவுக்கு
கிடைக்கா விட்டால்
அவன் வாழ்வு
அர்த்தம் கிடைக்காமல்
வீண் ஆகி விடாதோ?

இப்போது தமிழன்
ஆடும் உப்பு மூட்டை விளையாட்டுக்கு
நாற்பது நாற்பது என்று பெயரிடலாம்
அது என்ன இரண்டு நாற்பது என்கிறீர்கள்
நம் இலக்கியத்தில் நாற்பது
ஒரு அற்புதமான இடம் வகிக்கிறது
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
நம் இலக்கியத்தின் சான்றுகள்

இந்த பதிமூன்றாம் தேதி
தமிழகம்
புதியதொரு நாற்பதை படைக்குமா?
தமிழன் முதுகு நிமிர்ந்து
தமிழன் விடையில் இருந்து வெளிப் பட்டு
கேள்வி ஆவானா?
அவன் முதுகு வெறும் உப்பு மூட்டை அல்ல
அது சருக்கவும் செய்யலாம்
என்று உணர்த்துவாநோ நம் தமிழன்?

உணர்ச்சியில் உருகி விடாமல்
உண்மைகளைத் தேர்ந்து புரிந்து கொண்டும்
அடிமை தாழ்வு மனப் பான்மைகளில் இருந்து
விடுபட்டும்
தற்சார்புடனும் சுதந்திரத்துடனும்
வாக்குப் போட முடியுமா தமிழனால்?

சாது மிரண்டால்
காடு கொள்ளாது
தமிழன் மிரண்டால்
நாடு கொள்ளாது!

தமிழா நீ விழிக்க வேண்டும்
விழித்த உடனேயே
நிமிர்ந்து எழுந்திருக்க
வேண்டும்
சரிந்து விழும் ஒட்டுண்ணிகளை
புறக்கணித்து விட்டு
நேர் கொண்ட பார்வையுடன்
புதியதொரு
சகாப்தம் படைக்க வேண்டும்
அது தமிழ் பேசும் உலகம் முழுவதற்கும்
புதியதொரு நம்பிக்கையாக
மலர வேண்டும்

செய்வாயா தமிழா?
செய் அல்லது
செத்து மடி!






செவ்வாய், 5 மே, 2009

என் முதல் தபால் ஆபீஸ்

என் வாழ்க்கையில்
சில நிகழ்வுகளுக்கு
என்னை எனக்கு வளர்பவனாகக்
காட்டிய பெருமை உண்டு

நான் முதல் முதலாக
தபால் ஆபீஸ் சென்று
காசைக் கொடுத்து
தபால் தலை பெற்று
அம்மா கொடுத்த தபால்களைப்
பெட்டியில் போட்டது
என்னை எனக்கு வளர்பவனாகக்
காட்டிய முதல் தருணங்களில் ஒன்று

இந்த ஓர் அலுவலில்
நிறையப் பொறுப்பு இருந்தது
ஒரு பொது மக்கள் புழங்கும் இடத்தில்
யாரைக் கேட்டு எதைப் பெற வேண்டும்
கொடுத்த பணத்திற்கு தபால் தலை
கிடைத்ததா என்று பார்க்க வேண்டும்

சரியான அளவு தபால் தலைகளை
ஒவ்வொரு தபால் மீதும்
பசை தடவி பொருத்த வேண்டும்
இதற்கு இவ்வளவு என்று அம்மா
சொன்னது சரியாக ஞாபகம்
வர வேண்டும்

திரும்பி வருகையில் பாக்கி
தபால்தலைகளை
தொலைக்காமல் வீட்டுக்கு
கொண்டு வர வேண்டும்

பொறுப்பாக முடித்த
வேலைக்கு வீட்டுக்கு
வந்தவுடன் கிடைக்கும்
ஏதோ ஒரு சிறப்புச்
சிற்றுண்டி

கை கால் கழுவி
விட்டு சாப்பிடச்
செல்லும் பொழுது
தபால் அலுவலகத்தில்
திறந்தபடி மூக்கைத்
திணறடித்த
பசை நாற்றம்
ஏனோ கையை விட்டு நீக்கத்
தயக்கம் ஒன்று வந்து போகும்
ஏதோ வளர்வதைக் குறைத்து விடும் போல

திங்கள், 4 மே, 2009

என் முகவரிகள்

நேற்றின் முகவரிகள் இன்னும் என் டயரியில்
என் டயரிகள் வீட்டின் ரகசிய அரண்களுக்கு
இடம் மாறி உயிர் பிழைக்கும்

என் நேற்றின் முகவரிகள் என்னிடம்
இன்றும் உள்ளன

இன்னும் எனது தபால் கார்டுகளுக்கு
நலமரிய ஆவல் இந்த
முகவரிகளுக்குள் இந்த டயரிகளைப்
போலவே எங்கோ புதைந்திருக்கின்றன

நானும் இந்த வலைகளில் திரியும்
போதெல்லாம்
நினைப்பதுண்டு
என் வலைக்கவிதைகளை
கார்டுகளில்
எழுதி இந்த முகவரிகளுக்கு அனுப்புவதற்கு
ஏன் இந்த கூகுல் ஒரு வழி செய்யக்கூடாது

சுவர்களின் வழியே நுழைந்து
வலை பிடிக்கும் இந்த மீனவனுக்கு
என் டயரிகள் என்ன பிரமாதம்?

என் டயரிகளும் முகவரிகளும் இன்னும்
சுவாசத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன
வலையில் விழத்
தவித்தபடி










ஞாயிறு, 3 மே, 2009

அட்சராப்யாஸம்

இந்த வலை ஸ்லேட்டு
எனக்குக்கிடைத்த
இந்த நாள் என் வாழ்வின்
ஒரு மகத்தான நாள்.

இந்த நாள் தான் நான்
வலையில்
தமிழில்
அட்சராப்யாசம்
செய்த நாள், இந்த பிஞ்சு
விரல்களை என்
தந்தை பின் புலத்திலிருந்து
இயக்கியது போல ஒரு
பிரமை
இப்போது தான் அவரது கன்னி முயற்சி
'செங்கரும்பின்' தலையங்கம்
ஒன்றை
அச்சகம் வரை கொடுத்து
அவரிடம் ஐம்பது பைசா
இனாம் பெற்றது போல் இருக்கிறது!

தமிழ் நதி என் வாழ்வில் கோடை கால
காவிரி போலே சுருங்கி விட்டாள் என்று
நான் வாடிப்போய் இருக்கும் பொழுது

என் கைகள் கூகிள் செய்து
மணல் தோண்ட,
கிடைத்தது தமிழமிழ்து.
கூகிள் தமிழை சொல்லிக்கொடுத்த
நண்பன் ராஜ்க்கு தமிழுள்ளவரையும் நன்றிக்
கடன் பட்டிருக்கிறேன்!


சாத்தமுது, கறியமுது என்றெல்லாம்
வைணவர்கள் குறிப்பிடும் உணவு வகைகள்
போல் அந்த திருக்கண்ணமுது போல் தமிழமிழ்து
தமிழ் என்றாலே அது அமிழ்தன்றோ?
அது என்ன தமிழ் அமிழ்து?

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
அமிழ்து ஆவது எங்கும் இல்லை!

அமிழ்து எது? அமிழ்து தமிழ்!
தமிழ் எது? தமிழ் அமிழ்து!

ஒவ்வொரு தினமும்
வலையில் வலம் வர
தமிழ் அன்னை தயை
புரிய வேண்டும்!

அன்புடன்,

தமிழ் அமிழ்து






































Y