உலக சரித்திரத்தில்
செருப்புகளும் ஷூக்களும்
நீடித்து தடயம் பதிப்பவை
நம் இதிகாசம்
ராமாயணத்திலோ
பரதன் காத்த
பாத தூளிகைகள்
தூய அன்பின்
காலத்தால் அழிக்க முடியாத
சின்னங்கள்
புஷ், சிதம்பரம் மற்றும்
அத்வானி மூவருக்கும்
பொதுவான ஒரே விஷயம்
ஏதாவது உண்டென்றால்
அவர்களை நோக்கி எறியப்பட்ட
ஷூக்கள் தான்
நினைத்துப் பாருங்கள்
உங்கள் வாழ்க்கையில்
முதல் முதலாக நீங்கள்
பார்த்த செருப்பு யாருடையது
முதல் முதலாக நீங்கள்
பார்த்த ஷூ யாருடையது
உங்களுக்கு முதல் முதலாக
செருப்பை அணிவித்து பார்த்த
கடை எங்கே இருக்கிறது
அப்போது உடன் யார் இருந்தார்கள்
என்றெல்லாம்
செருப்புக்களும் ஷூக்களும்
உங்கள் சுய சரித்திரத்தின்
காலக் கோர்வையை
கையில் கொண்டு வந்து
கொடுத்து விடும்
நினைத்துப் பார்க்கிறேன்
நான் முதலில் பார்த்த செருப்பை
யூகிக்கத்தான் முடிகிறது
அக்கா, அம்மா, அப்பா
இவர்களின் செருப்புகளில்
ஒன்றாக இருக்குமோ
பாட்டியின் செருப்பைப்
பார்த்ததாகவே நினைவில்லை
இது என்னை நெருடி உலுக்குகிறது
பாட்டி எப்போதாவது அணிந்திருப்பார்
வேண்டும் என்னும் போது
என்று சமாதானம் செய்து கொள்கிறேன்
அம்மா செருப்பு தான்
நினைவில் வருகிறது
அம்மாவின் செருப்பு பெரியது
கடையில் பெண்கள் பகுதியில்
கிடைக்கவே கிடைக்காது
பாதம் பெரியது என்பதால்
ஆண்களுக்கான செருப்பை தான்
வாங்க வேண்டும்
அப்பாவின் செருப்பும் நினைவுக்கு
வந்தாலும் அவர் காட்டிய
புரிந்து கொள்ள முடியாத
கோபங்கள் இப்போதும் அவை மீது
என் நினைவுப் பார்வையை
தவிர்க்க செய்கின்றன
என் வீட்டு மனிதர்கள்
யாருக்கும் பொதுவாக
ஒரு ஜோடிக்கு மேல்
செருப்புகள் இருந்தது இல்லை
ஒரு ஜோடியின்
விதிக்கப் பட்ட
வாழ்க்கை நீட்டிக்கப்பட்டு
அதுவும் முடிந்த பின் தான்
அடுத்த ஜோடி
இப்போது போல ஷூ ராக்கை
திணறடிக்கும் பற்பல ஜோடிகள்
எங்கள் காலத்தில்
அல்லது எங்கள் குடும்பத்தில்
இருந்தது கிடையாது
எங்கள் வீட்டின் ஒரே
சிறு பெண் தமக்கையைக் கூட
நிறப் பொருத்தத்துடன்
காலணி அணிந்து பார்த்து இல்லை
மகாத்மா காந்தியை
மிகச் சுலபமாக
அடையாளம் காட்டியவை
அவர் கண்ணாடியும், காலணிகளும்
மற்றும் அந்தக் கைத் தடியும் தான்
இன்றும் இவற்றை மட்டும்
வரைந்து விட்டு மற்ற இடத்தை
வெற்றிடமாக விட்டு விடுங்கள்
ஓர் இனம் புரியாத சோகம்
உங்களைக் கவ்வினால்
ஆச்சர்யப் படுவதற்கு இல்லை
நம் கடந்த காலத்தின்
சுவடுகளின் ஒருமித்த
உருவகம் ஆகும்
இந்த செருப்புகள்
நம் எதிர் காலத்தின்
விளிம்பில் நின்று நம்மை
நாம் கற்பனை செய்து
கொண்ட,
நம் வார்ப்புகளின்
முன்னோடியாகவும் இருந்ததுண்டு
எப்போ நான் பெரியவனாவேன்
என்ற கேள்வி நம்
மனத்திரையிலோ
நாக்கிலோ
நடம் ஆடுவதற்கு முன்னால்
நம் பாதங்களால்
ஒத்திகை செய்யப்படுவது
பாதங்களை விடவும்
பெரிய செருப்புகள் மூலம் தான்
இந்த கேள்வி
நம்மை விட்டு எப்போதாவது
நிரந்தரமாக
விலகியதா என்று
சொல்வது கூட கடினம் தான்
நம் பாத அளவு
முடிவாகிப் போன போதும் கூட
எப்போ நான் பெரியவனாவேன்
என்னும் கேள்வி நம்
பாதங்களை
நம் செருப்புகளை விடப்
பெரிய செருப்புகளைத்
தேடி
அணிந்து பார்க்கச்
சொல்லிய வண்ணம்
தான் இருக்கின்றது
எங்கள் வீட்டு வாசலில்
மாலை நேரம்
ஏகப் பட்ட காலணிகள்
விதம் விதமாய்
பார்த்திருக்கின்றேன் இளம் வயதில்
இவற்றின் உரிமையாளர்கள்
அம்மாவின்
வகுப்புக்காக காத்திருக்கும் நேரம்
சாயும் காலம் மரங்களில் அமர்ந்து
சல சலக்கும் பறவைகள் போல்
பேசும் பாலகர்கள்
பெரும்பாலும் சிறுமிகளின்
குரல்களின் ஒருமித்த சத்தத்தில்
எனக்குக் கிடைத்த
இனம் புரியாத நல்லுணர்வு
அறிவைப் போல்
அதைப் பகிர்வதைப் போல்
உலகம் முழுதும்
நாடக் கூடிய
செழுமையோ வளமையோ ஒன்று
இல்லை என்றே என்னுள் பதிந்தது
அந்த செருப்புகள் அத்தனையும்
அகன்ற பின்
வீட்டினுள் நிலவும்
பேரமைதியின் இடையில்
வாசலில் ஓய்வெடுக்கும்
தன் தேய்ந்து போன
செருப்புகள் அளவு கூட
ஓய்வெடுக்க இயலாத
அன்னையின் அருகே எரியும்
மேஜை விளக்கும்
அவரது காலத்தை
சோதித்து வெல்லும்
படிப்புகளும்
எனக்குக் கொடுத்த
இனம் புரியாத
சாதனை வேகம்
இன்றும் என்னை என்
பாதங்களுக்குப் பெரிய
ஷூக்களில் நுழைந்து
நடை பழகிப் பார்க்கும்
இடறி விழுந்த போதும்
எழுந்து மீண்டும் முயலும்
துணிவுக்கு
துணை போகின்றது
நம் பயணங்களில்
சிலர் செருப்புகளும்
சிலர் ஷூக்களும்
தொடரும் போது
தலை முறை தலை முறையாக
தொடரும்
போராட்டப் பயணங்கள் கூடப்
புரியத் தான் செய்கின்றன
(பயணம் தொடரும்
பாதங்கள்
உறங்கும் வரை)
ஞாயிறு, 26 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக