புதன், 22 ஜூலை, 2009

மீண்டும் இவள்.....

யுகங்கள் மாறினால் தான் என்ன
நகங்கள் கீறினால்
ஆறுமோ காயங்கள் ?

மீண்டும் இவள்
புறப்பட்டாள்

வீட்டில்
வெளியில்
நெரிசலில்
அலுவல் வழிசலில்

மீண்டும் இவள்
புறப்பட்டாள்

குடும்பம் என்னும்
ஒரு கனவை
ஒரு பிடிப்பை
ஒரு துணையை
ஒரு விழிப்பை
விட முடியாது
மீண்டும் இவள்

கருக்கலில்
சமையலில்
கரை சேர முடியாத
நெருக்கடிகள்
அலைகளைப் போல்
நெருடலுடன் தொடர்கின்ற
நெருஞ்சிமுள்
படுக்கையில் சாயும் வரை
நூறு முறை
மீண்டும் இவள்

தன் கண்களின் ஈரத்தை
சிறிதளவு
பகிர்ந்து கொள்ளலாம்
என்ற நப்பாசையில்
வீடு திரும்பும் போதெல்லாம்
இவள் ஓரப் பார்வைகள்
சந்திப்பதோ

ஏற்கனவே
நனைந்திருக்கும்
ரோபோக்களின் கண்கள்,
கேளிக்கைக்கு
இழந்த
இவற்றின் ஈரம்
மீண்டும் வனவாசம்
சென்ற சீதைக்காகவா
அல்லது
சுயம்வரம்
விளையாடும் நடிகைக்காகவா
என்று புரியாதபடி!

யுகங்களின்
மாறுதல்களைப்
புறக்கணிப்பதே
ஒரு தவம் போலும்

சளைக்காமல்
அடுக்களைக்குள்
செல்வாள்

மீண்டும் இவள்!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக