வியாழன், 22 அக்டோபர், 2009

அதி காலை
மெல்லத் தழுவும் சூரியன்
இலைகளின்
அசைவில் தெரியும் ஒளி
தெரியாத காற்று
விழிப்பின் முதல் உராய்வில்
கண்கள் திறக்கக்
கரைந்தன பறவைகள்
ஓ,
அதி காலை oliyum
indhap
paravaigalukku
கொஞ்சம்
athiyo?

சனி, 10 அக்டோபர், 2009

விடுமுறை

உன் பாதச் சுவடுகளைப்
பார்த்ததும் பூரித்தேன்

எனக்கு ஆச்சர்யம் வர வேண்டும் என்று
சொல்லாமல் என்னைத் தேடி
வந்து போய் இருப்பாய் என்றும் யூகித்தேன்

உன் பாதச் சுவடுகளைத்
தொடர்ந்து உனக்கு
அதே ஆச்சர்யம் தர முடியும்
என்று யோசித்தேன்

கடற்கரை வரை வந்து சேர்ந்தேன்
ஓ, மழை கடலில், கரையில்
என் மேனி முழுதும்

நம் இருவரையும்
தொடர்ந்து வந்த இயற்கையை
எண்ணி மாய்ந்து போனேன்

உன் பாதச் சுவடுகள்
கலைந்ததில்
எனக்கு வீடு திரும்பத் தெரியவில்லை 

புதன், 7 அக்டோபர், 2009

இந்தக் கவிதைகள்

நான் இவற்றை
எழுதுவது துர்லபம்

நான் எண்ணங்களின்
மொழிபெயர்ப்புகளை
எழுத எத்தனிக்கும் முன்பு

இவை என்னை
எழுதி விடுகின்றன

என்னை இவை
எழுதுவது போல
அறிமுகப் படுத்துவது இல்லை
எந்த கவிஞனுக்கும்

என் வலைகளில்
என் மௌனங்களில்
என் நிழல்களில்
என் துணையாக
என்னை வரைந்தபடி
என்னை எழுதியபடி
என் கவிதைகள்

இவை என்னை
எழுதியதில்
ஒரு துளி கூட
நான் இவற்றை எழுத
முடிந்தது இல்லை

என் கவிதைகள்
நான் வளர்வதற்கு
முன்பு இருந்தே
உடன் இருந்து
என்னால் புரிந்து கொள்ள
இயலும் தருணம் வரை
எனக்குப் புலப்படாமல்
என் பார்வைக்கு என்றே
காத்திருக்கும் என் கவிதைகள்

நான் புரிந்து கொள்ளாமலேயே
என்னைச் சுற்றிலும்
சூழ்ந்த பசுமை போலும்
என் மீது விழாமலே
நான் காண வீழ்ந்த மழை போலும்

நான் புரிந்து கொள்ளாமலேயே
எனக்கு கருணை புரிந்து
என்னைக் காத்த என் கடவுள் போலும்

நான் புரிந்து கொள்ளாமலேயே
என்னை வளர்த்த
எனக்கு வழி காட்டிய என் அன்னை போலும்

நான் புரிந்து கொள்ளாமலேயே
என்னை எனக்குக் காட்டி
என் உலகமாக உருக்கொண்டு விட்ட
என் கவிதைகள்

என் வாழ்க்கையின்
பிரவாகத்தில்
என்னைத் தேக்கிக் கொண்டு
கரையோரம் நதியின்
புது வெள்ளம்
ஓயட்டும் என்றே
காத்திருக்கும் என் கவிதைகள்

என் மரணத்தின் போது
என் உடைமைகள் என்று
ஒரு சில என் வீட்டில் தங்கலாம்
என்னை இழந்தவர்கள்
எனக்காக அழலாம்
ஊரும் உறவும் அடங்கிய பின்
உற்றுப் பாருங்களேன்

நான் எழுதிய
உங்களிடம் 
வந்து சேராத
சில காகிதங்களில்
கிடைக்கும் கவிதைகள் இருக்கும்

மேலும் என்னை எழுதி
இன்னமும் எழுதும்
ஈரத்துடனும்
தகுந்த நேரத்துடனும்
மரணம் அடையாத
கவிதைகள்
உங்கள் உணர்வுகளின்
சந்திப்புக்காக
உறங்காமல் மௌனம் காத்தபடி
ஓயட்டும் ஒப்பாரிகள் என்றபடி
காத்திருக்கும்

இவை எழுதி
நான் காண
வாழாமல்
நீங்கள் பார்க்கின்ற
'நான்' உடன்

வெள்ளி, 2 அக்டோபர், 2009

உலக முதியோர் தினம்

உலக முதியோர் தினம்

காலம்  எனும் வானவில்
நிலம் விழும் காலம்
உயிர் சாயும் காலம்

பயணம் ஒன்று
கடமையாகத் தொடரும்

ஏறும் பொழுது கொண்டு
வந்த சுமைகள் என்னவோ
இறங்கும் பொழுது
ஒன்றும் இல்லை

ஓடி ஓடி
நடந்து கூட்டிச் சென்ற
குழந்தைகள் வளர்ந்து
புலம் பெயர்ந்து

mudhiyavargalukkum
munbaagave
pugaippadangalaaga
surunginar

வியாழன், 1 அக்டோபர், 2009

கரை ஆன நதி

தாகத்தில் நதியின்
நா வரண்டது
நதியின் மரணம்
எப்பொழுது வேண்டுமானாலும்
நிகழலாம்
புதைப்பது கடினம்
மணல் படுகையில் இடம் என்று
ஒன்று இல்லை
சொல்லப் போனால்
மணல் கூட இல்லை

கடலில் வீழ்ந்து
காணாமல் போன
மழையை நதி பார்க்க வில்லை
அதனால்
அதன் ஆன்மா சாந்தி
அடைய வாய்ப்பு உண்டு
தகனக் கிரியைகள் எங்கே
நடக்கும்
எந்த நதியின் கரையில்?

நதி ஓய்ந்து போனது
கேள்விகள் ஓய வில்லை!

நதியில் விழுந்து
கடலில் சேர
வாய்ப்பு இல்லை என்று
உணர்ந்த மழை
ஒரு கேள்வியும் இன்றி
மீண்டும்
மீண்டும்
கடலில்
பெய்தது
வெற்றுக் காற்றுகளை
கரைக்கு அனுப்பிய படி

எந்தக் கரை?

கடலுக்குக் கிடைத்த கரை
கடலால் எப்பொழுது வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளப் படும்
நிலையிலும் கிடைத்த கடற் கரை போல்
ஒரு கரை
நதிக்குக் கிடைக்க வில்லை

நகரத்தின்
நரக பெருக்கத்தின்
நுகர்வுகளின்
புழுக்கங்களின்
பாதிப்புகளில்
சுரண்டல்களின்
இறுதிக் கட்டத்தில் 
நதியே கரை ஆனது

கால காலமாக
என், என் தந்தை, என் முன்னோர்கள்
வளர்ந்த பன்னூற்று ஆண்டுகளும் 
தன்னை
வழிபட்ட
சமூகங்களின்
எண்ணற்ற கடவுள்களும்
இடம் பெயர்ந்த 
கரைகளுக்கு இடையே
சுழன்று ஓடிய நதி

இன்று தானே
ஒரு கரையாகக்
கிடந்தது 

காலத்தின் மரண
வாக்கு மூலத்தை
மணலில் எழுதுவதற்காக
விரிக்கப் பட்ட
நீண்ட மடலே போலும்